Thursday, November 24, 2016

அம்மா சொல்லட்டும்னு காத்திருக்கோம்!!! சிறுகதை

"அப்போ முடிவா  நீ என்ன தான் சொல்ற?.."
"எனக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணா போதும்னு ஜாதகத்துல இருக்கு, அதுக்காக நீங்க இன்னும் மூணு வருஷம் காத்திருப்பீங்க, அதுக்குள்ள என் மனசு மாறும்னு நீங்க நெனைக்கலாம் ஆனா, அவ வீட்ல எப்படி காத்திருப்பாங்க?"
"......."
அவளுக்கும் என் வயசுல ஒரு அண்ணன் இருக்கான், அவன அவங்க பாக்குறாங்க"
"சரி.. இப்போ அதுக்கு"
"ஒண்ணுமில்ல, ஆனா ரொம்ப நாள் காத்திருக்க முடியாது...
இன்னும் ஒரு அஞ்சு மாசம், அப்புறம்..."
"அப்புறம்..."
"அப்புறம் நானே எதாவது முடிவெடுக்க வேண்டியதுதான்..."
"அப்படின்னா... நீ தனியா பொய் கல்யாணம் பண்ணிக்குவா?"
":.........."
"அப்போ... நீ எங்கள விட்டு போய்டுவ..."
"........"
"உனக்கு நானும் அப்பாவும் வேண்டாம்?"
"வேண்டாம்னா நான் ஏன் இத்தனை நாள் உங்ககிட்ட இப்படி கேட்டுட்டு இருப்பேன்..."
"இப்போ நீதானே சொன்ன, வேறமுடிவு எடுப்பேன்னு... நீ சம்பாரிக்குற... உன் முடிவை நீ எடுக்கலாம்"
"அம்மா ஏன் மா புரிஞ்சிக்கமாட்டேங்கற...?"
"இல்ல டா.. உனக்கு நாங்க முக்கியமில்லன்னு தெரிஞ்சிருச்சு, வேற என்ன செய்ய சொல்ற?"
"அம்மா, நீங்க  வாழ்ந்துமுடிச்சிட்டீங்க, எனக்கு இன்னும் ஐம்பது வருஷ வாழ்க்கை இருக்கு..."
"அது செரிப்படாது டா..."
"இப்போ என்ன விட சொல்றீயா? இல்ல அவளை விட்ருவேன்னு நெனச்சியா?? இல்லம்மா...என்னால முடியாது"
"சரி... நான் காலைல பேசறேன்... விடு..." அந்தப்பக்கம் போன் வைக்கப்பட்டது.
என்ன செய்வதென்று புரியாதவனாய், யோசித்தவாறே கெளதம் படுக்கையில் சாய்ந்து மீண்டும் யோசித்தான்.
எட்டு வருட காதல், பல்வேறு சண்டைகள், கோபங்கள், உணர்வுகள், பகிர்வுகள் என எத்துணை விஷயங்களைக் கடந்து இந்தக்காதல் எல்லாவற்றிற்கும் மேலான நட்பாகிப்போனது. ஆரம்பத்தில் திவ்யா சின்னச்சின்ன விஷயங்களைக் கூட அதிகமாக எதிர்பார்ப்பாள். என்னைவிட, என் காதலைவிட நான் பெரிதும் நேசிப்பது என் நட்பு, மனோ. ஒரு நாள் திவ்யா என்னிடம், "உங்களுக்கு மனோ பெருசா நான் பெருசா?"
டக்கென்று நான், "மனோ தான்.."
அவள் முகம் சுருங்கியது, "அப்போ நான் இல்லையா?" அழவே ஆரம்பித்துவிட்டாள்.
சமாதானம் செய்து அவளிடம், "இங்க பாரு, இன்னைக்கு நான் நானா இருக்கேன்னா, இந்த நிலைமைக்கு, என் வாழ்க்கைக்கு எல்லாம் மனோ மட்டும் தான். அவன் இல்லனா நான் ஒண்ணுமே இல்ல.. இன்னைக்கு நீ பாக்குற கௌதம் மனோவால வந்தவன்.. அத புரிஞ்சுக்கோ.. இப்போ சொல்லு, என்னக்கு யாரு மொதல்ல இருக்கணும்னு?"
கண்களை கசக்கிக்கொண்டே "மனோ அண்ணா தான்" என்றால் முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு. நான் சிரித்தபடியே அவள் முகத்தினை கைகளோடு என் நெஞ்சின் மீது இழுத்து அணைத்துக்கொண்டு..
"லூசு" என்றேன்.
அன்றிலிருந்து மனோ அவளுக்கு உண்மையான அண்ணணாகிப்போனான். அவனை திட்டினால்அவளிடமும், அவளைதிட்டினால் அவளிடமும் இடையறாது திட்டு வாங்குவது எனக்கு பழக்கமாகி போய்விட்டது. அதுவும் ஒரு சுகமாகிப்போனது. என்னை நேசிப்பதென்பது என்னை மட்டுமல்லாது, என்னை சார்ந்த உறவுகளையும், நட்புகளையும் மதிக்கும் தன்மையினை அவள் வளர்த்துக்கொண்டாள். என்னை புரிந்து, என்னைப் புரிந்தவர்களையும் நேசிக்கும் ஒரு நேசம் எனக்கு இடையறாது கிடைத்தது. அன்றிலிருந்து எங்கள் காதல் ஒரு அழகான நட்பாய் மலர்ந்தது. எவ்வளவு சண்டைகள் வந்தாலும் ஒருவரைவிட்டு ஒருவர் அகலாத தன்மை சேர்ந்துவிட்டது. எட்டு வயதாகிப்போனது எங்கள் காதலுக்கு. கல்லூரிக்காலங்களில் ஒரு சிறு அரும்பாக இருந்த உணர்வு, அந்த காதல் இன்று ஒரு கனகமெங்கும் நிறைத்திருக்கும் ஒரு காட்டுப்பூவாய் பரவி நிற்கிறது. அவள் ஒரு கண்ணாடி போல ஒரு கட்டத்தில் என்னைப் பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டாள். நான் சிரித்தாள் அவளும், அழுதாள் அவளும், தன்னை என்னுடையதாக்கிவிட்டாள். எனக்கு இன்னும் நான் அவளின் மேல் கொண்ட அன்பு குறைவோ எனும் எண்ணமே அவளின் அன்பினைப்பார்க்கும் பொழுது தோன்றுகிறது. 
"நானென்ன அவ்வளவு பெருசா? என்னையே பெரிய உலகஅதிசயம் மாதிரி என் இவ்வளவு நேசிக்குற" நான் கேட்கும்போது விழிவிரித்து கூர்மையாக என்னைப் பார்த்து மெதுவாக தலை ஆடுவாள். அதற்கு ஒவ்வொரு முறையும் நான் ஒவ்வொரு அர்த்தம் கொள்ளவேண்டியிருக்கும். நட்பாகிப்போன ஒரு காதல், அனால் இரு வீடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. என்னை மிகவும் புரிந்துகொண்ட அம்மாவும் அதே தீர்மானத்தில் தெளிவாக இருந்தாள். இதெல்லாம் மனதில் கண நேரத்தில் ஓடிக்கொண்டிருக்க, மீண்டும் அலைபேசி ஒலித்தது. அம்மா...
"சொல்லுமா..."
"சரி உன் முடிவை நீ சொல்லீட்டே... என் முடிவு..."
"........."
"இது தான் நான் கடைசீயா உன்கிட்ட பேசுறது..."
"ஏன் மா இப்படி பேசுற?"
"இல்ல கௌதம், நான் பழகிக்கணும்... நீ இல்லாம வாழ பழகிக்கணும்... ஒரே பையன் நீ, நீயும் எங்களுக்கு இல்லனு ஆயிட்டே.. இனி நான் தனி தான்..."
"மா..."
"அவளோதான்... இனி நான் பேச மாட்டேன்..." போன் வைக்கப்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி அடிக்கடி அம்மாவிடம் சண்டை போடுவது சகஜம் தான், காலையில் பேசிக்கலாம் என்று பல சிந்தனைகளில் தூங்கப்போய்விட்டேன். 
அம்மா... என் வாழ்க்கைக்கு மிகப்பெரும் நம்பிக்கை தந்தவள். திவ்யாவை நான் நேசிக்க ஆரம்பித்த மூன்றாவது நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். பள்ளிப்பருவ கைகூடாக் காதல் கூட ஒருமுறை அம்மா மடியில் துவண்டு புரண்டு அழ என்னை மறுபடியும் பழைய நிலைக்கு திருப்பினாள். எத்துணை காதல் கவிதைகள், காதல் படங்கள், நாவல்கள், அத்தனையும் அம்மாவுடன் சமையலறையில் நடந்துகொண்டே விவாதித்திருப்பேன். காதல் என்றால் என்ன, பெண் யார் எல்லாம் அம்மா கற்று தந்த பாடம்.  
ஒரு நாள் நடுசாமம், அம்மாவுடன் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருக்கும் போது,
"ஏம்மா... நீ போய்ட்டா என்னக்கு யாரும்மா... யாருகிட்டமா நான் இந்த மாதிரி பேசுவேன், இன்னொருத்தங்க உன்னமாதிரி என்ன புரிஞ்சிக்குவாங்களா? நான் அனாதையாய்டுவேன்ல மா" கண்ணீர் தழும்ப அழுதேன் நான்.
"அப்படிலாம் இல்லடா கண்ணா.. நான் இல்லன்னா யாராவது அந்த இடத்துக்கு வந்துருவாங்க.. இந்த உலகம் அப்படித்தான், யாரோ ஒருத்தங்க நமக்காக இருப்பாங்க. யாரும் இல்லாம போக மாட்டாங்க, உன்ன புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தங்க இருப்பாங்க" என்றாள். இருந்தும் அம்மா இல்லையென்றால் என் வாழ்வில் வரும் வெறுமை பற்றி யோசித்தேன். எனக்கு வாழ்க்கையை மிக அழகாக புரியவைத்தவள் அம்மா. அப்பா அன்பானவர் தான், அனால் பெரிதும் அவர் தாக்கம் என்னுள் ஏனோ பெரிதும் எழவில்லை. 
எனக்கு வேலை சென்னையில், பத்து மணிக்கு ஆபீஸ், ஏழு எட்டு ஆகிவிடும் வேலை முடிய, காலை உணவிற்கு முன்பொருமுறை, பின்பொருமுறை, மதிய உணவிற்கு முன்பொருமுறை, பின்பொருமுறை, இடையில் காபி சாப்பிடும் போது, சாலையில் நடக்கும் பொது, இரவு உணவு முடித்து ஒரு பெரும் நேரம் என அம்மா, அம்மா, அம்மா.. அவள் குரல். அருகாமை. 
என்னைக் கடந்து செல்லும் நண்பர்களெல்லாம் "என்ன ஜீ.. ஒரே போன் தான்.. எப்பவுமே.... ம்ம்ம்... நடத்துங்க..."
"எங்க நீங்க வேற, வீட்ல பேசுறேங்க.."
"வீட்லன்னா ... அவங்க கிட்டயா.."
"யோவ்... என் அம்மாகிட்ட பேசுறேன் யா... இந்தா நம்பர் பாக்குறீயா?" என்றால் நம்பிக்கை இல்லாமல் கண் சிமிட்டி செல்வார்கள். 
என்னுடைய தோழி போல், ஆசிரியர் போல், வழிகாட்டி போல் எல்லாம். இப்படி இருக்கும் அம்மா எப்படியும் எங்கள் காதலை ஏற்றுக்கொள்வாள் எனும் பெரும் நம்பிக்கை வைத்தது தான் இன்று பிசகாய் போய்விட்டது. அம்மா தலையசைத்தால், அப்பாவும் சம்மதிப்பார் என நினைத்து இருந்தது பெரும் பிழையாகிவிட்டது. வீட்டின் அரவணைப்பிலேயே இருந்துவிட்டு, இன்று ஒரு பெண்ணுக்காக வீட்டினை புறந்தள்ள நினைப்பது மிகுந்த வேதனை தான். ஆனால் சொந்தங்களுக்காக, சாதி சனங்களுக்காக என் வாழ்க்கையினை அடகு வைக்க வேண்டுமா? இன்னொரு பெண் வந்து என்னைப்புரிந்துகொண்டு என்னால் சுமுமாகமாக வாழ முடியுமா என்பதெல்லாம் யோசித்து யோசித்து, பின்னர் தான் சுயமாக வாழத்தலைப்பட்ட நினைத்தது. காதல் ஆரம்பத்தில் மிகப்பெரும் போதையாக, மகிழ்ச்சியாக இருந்தது, இருக்கிறது தான், அனால் இந்த சமூகம் இன்னும் காதலை ஒரு அங்கமாக பார்க்கப்பழக்கவில்லையோ என்று தான் தோன்றுகிறது. எத்துணை காதல் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள், இதுநாள் காதல் நாவல்கள், இருந்து ஏன் இத்துணை விஷயங்கள் காதலுக்காக என நினைத்தபோது ஒன்று மட்டும் புரிந்தது, இங்கு நாம் நமக்காக வாழவில்லை, யாரோ ஒருவர் சொல்லுக்காகவே வாழ்நாள் முழுதையும் அடகுவைக்கும் மடமை நம் சமூகத்தில் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆழ்மனத்திற்குள் இங்கு ஒவ்வொருவருக்கும் காதலிக்கும் வேட்கை, தீராத வேட்கை, அனால் அது இந்த சமூகக்கோட்பாடுகளுக்குள் சிக்காது ஆழ்மனதிலேயே புதைந்துவிடுகிறதாய் எனக்கு தோன்றியது. 
காதலைப்பற்றி, எத்துணையோ காதல் கவிதைகளை நான் எழுதும்போது, என்னை ஏற்றுக்கொண்ட அம்மா இன்று அது நடைமுறைக்கு வரும்போது விலக்க முற்படுவது எனக்கு முரணாய்பட்டது. எனக்கு நீ வேண்டாம் என எப்படி ஒருசில நொடிகளில் முடிவெடுத்து, "நீதாண்டா எனக்கு" என சொல்லிய அம்மா இன்று நீ வேண்டாம் போ என மறுத்தது எனக்கு புரியவில்லை. காதலும் அன்பும் எல்லைகளற்றது என்றால், நான் நேசிக்கும் ஒரு பெண் எப்படி நீங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியல், சமூகவியல் எல்லைகளுக்குள் வரமுடியும். என் வாழ்வின் எல்லைகளை நானே முடிவு செய்யவேண்டும் என்பதில் தவறு உள்ளதோ? அல்லது என்னை அன்பால் சிறை செய்து மீட்க நினைக்கிறாளா? அனால் எனக்கு அம்மாவைப் பற்றி நன்கு தெரியும், அவள் முடிவின் தீர்க்கம் நானறிவேன். எத்துணை தத்துவங்கள் பேசிய அம்மா இன்று அவைகளை புறந்தள்ளி, என்னையும் புறந்தள்ள துணிந்துவிட்டது என்னால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காலையில் அழைத்தாயிற்று, மாலையில், முதல்நாள், இரண்டாம் நாள் என ஒரு வாரம். அம்மா அழைப்பை எடுக்கவில்லை. கட் செய்தாள். அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது இந்த மாதம் குதிரைக்கொம்பு. 
அருகில் உள்ள நண்பன் மூலமாக, அம்மா பற்றி யாரோ ஒருவர் போல் விசாரித்துக்கொள்ள தான் முடிந்தது... அதற்குள் மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. 
திவ்யாவிடம் இதுபற்றி சொல்லவேயில்லை. அம்மாவுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு அவளுக்கு தெரியும், சொல்லி குற்ற உணர்வில் அவளை தத்தளிக்கவைக்க  விருப்பமில்லை. ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் வரும் அம்மாவின் அழைப்பின்றி என் வாழ்வும் வெறுமையாக உணர்ந்தேன். மனோ வேறு மாநிலத்தில், அலுவல் சுமை, வாரமொருமுறை அழைத்து அளவளாவுவதே மிகப்பெரும் விஷயமாகிவிட்டது. ஊரைவிட்டு வேறொரு இடத்தில் நம்மைக் கேட்கக்கூட நதியில்லா ஒரு சூழலில், அலைபேசி எத்துணை பெரிய வருமென்று ஒரு காலத்தில் உணர்ந்திருந்தேன் அனால் இன்று அதே அலைபேசி யாரும் அழைக்க ஆளில்லாது அநாதை போல் இருந்தது. ஒரு ஆண் எல்லா உறவுகளில் இருந்தும் எளிதில் மீண்டு விடுவான் அனால் அம்மா, மனைவி இது இரண்டும் அவனுக்கு மீள முடியாதது. இரண்டும் ஒரு பெரும் நட்பாய் அமைகிறபோது அவன் அதற்கு அடிமையாகவே ஆகிப்போகிறான். இரண்டும் எதிரெதிர் துருவங்களாகி நின்று விடுகின்ற போது ஒரு ஆணின் வாழ்க்கை நரகமாகிப்போகிறது அதே இரண்டும் ஒரே துருவத்தில் நிற்கின்றபோது அவனைப்போல ஒரு பலம் பொருந்தியவன் இருக்கவே முடியாது, அவனால் செய்யமுடியாது எதுவுமில்லை. ஆண் தசை பலத்தினை மட்டுமே நம்புபவன் அல்ல, வாழ்வில் வெற்றிபெறத்துடிக்கும் ஒவ்வொரு ஆணும் ஏங்குவது மனோபலத்திற்குத்தான். அம்மாவையும், திவ்யாவையுமொரு துருவமாக்கிடத்தான் நான் பெரிதும் ஆசைப்பட்டேன். என்னைப் போல எல்லா ஆண்களும் அதைத்தான் ஆசைப்படுவார்கள் என்று தோன்றியது. யாரோ ஒருவர் நம்மை நினைத்திருக்கிறார்கள் என்பது வாழ்க்கைக்கு மிகப்பெரும் பலம். மரணமென்பது நம் உடலால் அழிவதில்லை, யாரோ உள்ளத்திலிருந்து நம்மை எடுத்துவிடும்போது அங்கு நமக்கு மரணம் சம்பவித்துவிடுகிறது. அம்மாவுக்கு நான் வேண்டாமா? அவ்வளோதானா.. கௌதம் வெறும் நடைபிணமா... திவ்யாவுடன் பேசுவதும் குறைந்தது. 
"ஏன் சரியா பேசுறதில்ல நீங்க?"
"..... ஒண்ணுமில்ல...."
"இல்ல, என்ன ஆச்சு மா?"
"அம்மா பேசறதில்ல..."
"என்ன ஆச்சு?" அதிர்ந்தவளாய் கேட்டாள்.
"நான் வேண்டாமாம்... என்னை தூக்கி எறிஞ்சுட்டாங்களாம்... நான் இல்லாம வாழப்பழகிக்கரங்களாம்.."
"வீட்டுக்கு போயிட்டு வாங்க.. எல்லாம் சரியாயிடும்"
"இல்ல திவ்யா... போகணும், எனக்கு என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்குற உரிமைகூடவா இல்ல... நான் என்ன தப்பு பன்னினேன்? நான் என்னைவிட அவங்க மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தேன், என்னைப் புரிஞ்சு நம்ம காதல ஏத்துக்குவாங்கன்னு.."
"......."
"எவ்வளவோ தத்துவங்கள் பேசுறாங்க ஆனா நடைமுறைக்கு வர்ரப்போ எந்த தத்துவமும் எடுபடறதில்ல.. நானென்ன பொம்மையா? இவங்க சொன்ன மாதிரியே உட்காரணும்னு. எனக்கும் எல்லாம் இருக்கு, சரி விடு எனக்கு ஒன்னும் சொல்ல தோணல... ஒரே ப்ளாங்கா இருக்கு..."
"நான் ஒன்னு கேட்டா கோவிச்சுக்க கூடாது"
"சொல்லு"
"இல்ல, என் மேல கோவம் வரலியா? என்னால தான் இதுனு...."
"இல்ல... இது நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து எடுத்த முடிவு, ஒண்ணா வாழானும்னு... நீயும் உங்க வீட்ல இத சொல்லி ரொம்ப கஷ்டப்படுற! இதுக்கு உன்ன மட்டும் எப்பிடி பொறுப்பாக்க முடியும், அது ரொம்ப தப்பு. யார் மேலயும் தப்பு இல்ல. அவங்களுக்கு அவங்க சொல்றபடி அவங்க பையன் கேக்கணும், நமக்கு நம்ம விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கணும். யாரையும் தப்பு சொல்றதுக்கில்ல திவ்யா..."
"........."
"விடு நான் அப்புறமா பேசுறேன். என்னக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்." என்று போனை வைத்தான் கௌதம். என் தரப்பு நியாயங்கள், கூச்சம் என வீட்டிற்கும் செல்ல ஒரு தயக்கம். 
இந்தத் தனிமை சில வாரங்களிலிருந்து பல மாதங்களாகிவிட்டன.... சௌந்தர்

Thursday, November 17, 2016

இறை வெண்பா!!!


உணர்விலே யொன்றிய உள்ஞான போதமாய் 
என்னுயிராய் நின்றபொரு ளே 


கனலாய்யென் னுள்ளே கனன்ற பெருவொளியே 
தண்ணளியே தத்து வமே 

ஒப்பாரும் மிக்காரும் எக்காலும் போற்றிடுமொப் 
பற்றப்ப ரமேந லமே  - சௌந்தர் 


பொருள்:

1. என் உணர்வினில் உட்கலந்த ஞானமாய், என்னுள் இருக்கும் பொருள். ஞானம் என்பது இறைவன், அந்த ஞானம் நம்முள்ளே இருக்கிறது. அந்த ஞான வடிவினன் இறைவன். போதம் என்றால் ஞான  மயக்க நிலை.
2. இந்த உயிர் உடலில் தங்க, வெப்பம் வேண்டும். இறைவன் ஞான வெப்பமாக, பேரொளியாக நம்முள் கனன்று கொண்டிருப்பவன். தண்ணளி - கருணை. கருணை மிக்கவன். தத்துவ வடிவானவன்.
3. தாழ்ந்தவர் இருந்து உயர்ந்தவர் வரை என்றும் போற்றும் இயல்புடையவன். ஒப்பற்ற பரம்பொருள். நம் வாழ்வின் நலமானவன். 

சேர்வதெப்போது!!!

என் பார்வை 
முன்னிலும் 
விரிந்திருக்கிறது!!!

என்னுள் 
உள்ளொளி பெருகுகின்றது!!!

என் பாதையினைப் பற்றி 
பெரிதும் எனக்கு தெரியாது...
தெரியவும் விரும்பவில்லை!!!

அங்கே 
நான்
இரு காலடித்தடங்களைக் காணுகிறேன்!!!

என் தலைக்குமேல் 
நிலவின் வெளிச்சமும்...
காலின் கீழ் 
நிழலின் இருளும் சூழ 
நடைபயில்கிறேன்!!!

காற்றினில் தலையசைக்கும் 
இலைகளுடன் -
நானும் தலையசைக்கிறேன் - அந்த 
தென்றலின் இசைவுக்கு!!!

என் பார்வைகள் 
எனதாக இருக்கலாம் - ஆனால் 
அதன் ஒளியாக...

பாதை எனதுதான் - அனால் 
அதில் பதிந்த 
பாதங்கள்....

என் பயணத்தில் பதிந்த 
காலடித்தடங்களில் 
ஒன்று...

இருள் சூழ்ந்த 
வழியதனில்
வெளிச்சம் வாரி இரைக்கும் 
தண் நிலவாக இருப்பது...

என்னை ஓர் 
இலையாய் இசையவைக்கும் 
தென்றல்....

இன்னும் புரியவில்லையா??!!
அந்த மழைத்துளி 
என்று
இந்த மண்ணோடு சேரும்!!!

வானையும் கடலையும் 
இணைக்கும் 
காலைக்கதிரவன் போல 
நம் வாழ்வில் 
என்று அந்த 
காலக்கதிரவன் உதிப்பது!!! - சௌந்தர் 

நான் எது??

என்னுள்  ஒன்று 
என்னைப் பார்த்துகொண்டிருகிறது...

நிசப்தத்தின் நிழல்களில் 
அது இளைப்பாருகின்றது!!!

எங்கோ 
என்னுள் தூங்கும் என் ஆன்மாவினை 
வருடுகின்றது!!!

இந்தக் கருணை,
வாஞ்சை,
அன்பு,
காதல்...
எல்லாம் எல்லாம் 
யாரையும் பற்றிடாது,
என்னுள் பாய்கிறது!!!

கண்ணீர் கண்ணீர்...
கருணையின் கண்ணீர்...
எதன்பொருட்டுமில்லா கண்ணீர்!!!

இந்த உலகம் என்னுடையதாகவும்...
என்னுடையது மட்டும் என 
ஒரு குழந்தை சொல்வதாய் உணர்கிறேன்!!!

இது என்னுடையதல்ல...
எதுவும் என்னுடையதல்ல...
என் கைகள் பற்றிடத்துடிக்கும் 
கரங்கள்...
அதன் கணங்கள்
எதுவும்...
எதுவும் என்னுடையதல்ல 
என்றும் ஏங்குகிறது!!!

இசையின் நிசப்தங்கள்...
நிசப்தத்தின் இசைகள்...
அமைதியின் ஆரவாரம்...
ஆரவாரத்தின் அமைதி...
என் முன்னின்று 
முரண்படுகிறது!!!

எது நான்???
எது எனது???
ஏன் இது???
ஏன் இது இல்லை???
எல்லாம் எல்லாம்...
என்னுள் பொங்கிப்பிரவாகிக்கின்றது!!!

ஆனந்தம்,
அதனினூடு அழுகை,
துயரம் 
அதனினூடு அன்பு என் 
முரண்கள் சந்திக்கின்றன என்னுள்!!!

இது தேடலின் பகுதி..
என்னுடைய இன்னுமொரு விகுதி...
என்றோ ஓர்நாள் 
விடை வந்து சேரும்!!! - சௌந்தர் 

Wednesday, November 16, 2016

மனதினைக் கொன்ற மனிதர்காள்!!! - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்



மனதைக் கொன்ற மனிதர்காள் நீவிர் வாழ்ந்தென் நிலைக்கண்டீர் 
தினமும் கணமும் நின்னையேநீ விர்தாம் நினைந்தே வாழ்வீரோ 
தன்னை முன்னின் றிருத்தியேநா ளும்நா ளும்வா ழும்வாழ்வே 
தென்னைமீ திடியாய் ஒருநாள்தான் தெறித்து வீழும் தானறிவீர்  - சௌந்தர்   

ஒரு தூசாய் நான்!!!

என்றும் தொலைந்திடும் 
ஒரு தூசாய்...

காற்றின் கரங்களில் தன்னைக்  கொடுத்து,
காலத்தின் கால்களில் பயணிக்கும் ஒரு தூசாய்...

வானுயரப்பறக்கினும்,
நானெனும் கனம்,
க்ஷணமும் தொற்றாது,
வான்வெளியினில் நீந்திடும் தூசாய்...

பயனென்றுகொண்டு பார்ப்பவர் கண்ணுக்கு 
பயனென்ன என்ன என 
பகன்றிடும் உதட்டிற்கு
பதிலேதும் சொல்லாது 
பறந்திடும் தூசாய்... 

அடையாளம் ஒன்று 
தடங்கள் வேண்டும்  என 
எண்ணிடும் எளியார்க்கெல்லாம் 
எளிமையாய் 
காற்றிலே தவழும் வலிமையாய் 
கணம்பொருந்திய தூசாய்...

பெயரில்லை, பொருளில்லை,
ஒன்றுமில்லை,
நான் தூசு எனினும் அதுவும் நானில்லை...
அப்படி ஒன்றுமில்லா நான்,
நானில்லா நான் 
இந்த பெருவெளியில் 
பறக்க, 
ப்ரபஞ்சத்தினை அளக்க,
ஒரு தூசாய் மாறிப்போவேனோ நான்!!! - சௌந்தர் 

கவிதை செய்வேன் கேளீர் - ஆசிரிய விருத்தம்!!!


எண்ணம் என்னும் ஊரினிலே எழுத்து என்னும் தேரினிலே 
வண்ண வண்ண நிறம்காட்டி வான வில்லின் கரம்போல  
அள்ளி அள்ளி சொல்லெடுத்து அழகாய் தமிழில் அதைசேர்த்து 
சின்னச் சின்னக் கவிதைகளை சேர்த்து வைத்து எழுதுகிறேன்

தெள்ளத் தெளிய தமிழமுதை தேர்ந்து தெளிந்த கருத்ததனை 
உள்ளம் கடக்கும் சொற்கொண்டு உணர்வு பூக்கும் பொருள்கொண்டு 
சொல்லச் சொல்லச் சொக்கவைக்கும் கவிதை என்னும் காவிரியில் 
வெள்ளம் வெள்ளம் எனும்போல அள்ளும் கவிதை அதைப்பாராய்  

கன்னல் மொழியாம் தீந்தமிழே கருதக் கருதக் கவிபெருகும் 
மின்னல் ஒளிபோல் ஒருகவிதை மிகவும் விரைவாய் உருவாகும்  
பின்னல் சடையாய் சொற்களெல்லாம் அருகே வந்தே அசைந்தாடும் 
முன்னம் என்னுள் எழுந்தபொருள் முழுதாய் இங்கே அரங்கேறும்  - சௌந்தர் 

Thursday, November 3, 2016

கந்தர் அனுபூதி - 2 ஞானாகரனே நவிலத்தகுமோ

அன்பர்களுக்கு வணக்கம், 

ஆனா அமுதே அயில்வே லரசே 
ஞானா கரனே நவிலத் தகுமோ 
யானாகிய வென்னை விழுங்கி வெறுந் 
தானாய் நிலைநின் றதுதற் பரவே. கந்தர் அநுபூதி 28 (அருணகிரிநாதர்) 
ஞானாகரன் என அருணகிரியார் முருகப்பெருமானை விளிக்கிறார். கருணாகரன் - கருணையே வடிவானவன், அதை போல ஞானாகரன் என்பவன் ஞானத்தின் வடிவெனலாம். இப்பதிகத்தில் அருணகிரியார் முருகப்பெருமானிடம், "ஞானமே வடிவானவனே" என விளித்து தற்பரத்தின் தன்மையினை விளக்குகிறார். அதற்கு முன்பு, ஞானாகரன் எனும் சொல் அழகும் பொருளும் ஒருசேரப் பொதிந்ததாக உள்ளது சிறப்பு. முருகப்பெருமானின் வடிவம் என்னவென்றால் ஞானம். ஞானம் பார்க்கவொண்ணாதது அனால் உணரக்கூடியது. மனிதனுக்கு மூன்று அந்தகரணங்கள் உள்ளன அவைகள் மனம், சித்தம்,புத்தி. இவை மூன்றுமே கண்களால் காண முடியாதது ஆனால் உணரக்கூடியது. இறைவன் மூன்றையும் கடந்து விளங்குபவன். நம் உடலில் ஒவ்வொரு ஆதார சக்கரங்களையும் நம் ஜீவாதார சக்தியான குண்டலினி கடக்க கடக்க ஒவ்வொரு அந்தகரணத்தையும் நம் ஆன்மா கடக்கிறது. ஆக்ஞா என்னும் ஆதார சக்கரத்தினை கடக்கும் போது புத்தி எனும் அந்தகரணம் கடக்கபட்டு சகஸ்ராரம் அடையப்படும் போது ஞானம் கிட்டுவதாக யோக நூல்கள் சொல்கின்றன. இங்கே இறைவன் அந்தகரணங்களையும் கடந்த நிலையினையே ஞானாகரன் என சுட்டுகிறார் அருணகிரியார். அப்படிப்பட்ட ஞானாகரனிடம் தற்பரத்தின் இயல்பினை விளக்கசொல்வது சொல்வது அறிவின் உச்சம். "யானாகிய என்னை விழுங்கு வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே" எனும் வரிகள் ஞானத்தின் உச்சம்.தற்பரம் எனும் சொல் மிகுந்த தத்துவார்த்தமானது. தன் + பரம், தற்பரமானது, தன் + பெருமை தற்பெருமை என்றாவது போல தற்பரமும் ஆனது. பெருமை என்பது ஒருவரை அல்லது ஒரு விடயத்தினைப் பற்றிய உயர்வான எண்ணம். தற்பெருமை என்பது இந்த எண்ணத்துடன் அகங்காரம் சேர்ந்துவிட்டால் அது தற்பெருமையாகிறது. பெருமை பேருடைத்து அனால் தற்பெருமை என்பது அகங்காரத்தின் கலவையாதலால் அது அழிவிற்கான ஒரு பொருளாகிறது. பரம் என்பது இறைவன். எந்த ஒரு தன்மையுமற்ற, செயலுமற்ற சுத்த நிர்குணமுடைய பரம்பொருளாகும். இதனை லலிதா சஹஸ்ரநாமம் "நிர்குணா" என விளிக்கிறது. அப்படிப்பட்ட எந்த தன்மையுமற்ற பரம்பொருள், தானாக எந்த செயலும் செய்யாதது. ஆதியில் உலகம் தோன்றிடும் முன்பு, ப்ரம்மம் ஏதுமற்று, செயலற்று பரமாக இருந்தது. இந்த சுத்த பரமானது ஏதும் செய்யவொண்ணாதது, எந்நேரமும் பேரின்பத்திலேயே பெரிதும் திளைத்து இடையறாது மோனநிலையினின்று இருப்பது. இந்த பரம் இவ்வுலகினை இயக்கும் திருவுளம் கொண்ட போது தான் எனும் தன்மை பெற்று பின்னரே அது தன்னிலிருந்து பல்வேறு விக்ருதிகளை (பல தேவர்களையும், தேவதைகளையும்) பிரமன் முதலாய படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் தெய்வங்களும் தன்பாற் உண்டாக்கியது. தான் எனும் இயல்பு சேர்ந்து, தற்பரமாகிறது. அப்படிப்பட்ட பரம், தான் எனும் தன்மை பெற்று தற்பரமாகி இவ்வுலகினை இயக்குகிறது. யான் என்பது அகங்கார நிலை, ஒரு ஞானி என்பவர் அகங்கார நிலையினை விட்டவராவர். அந்த அகங்காரம் எப்படி அழிக்கபடுகிறது என்றால் அதைவிட பெரிய அகங்காரம் ஒன்றால் விழுங்கப்படவேண்டும். அப்படியான தற்பரம் விழுங்கும் பொது, இந்த சிறிய "நான்" அந்த பெரிய நானான தற்பரத்திடம் ஒன்றாகி கலந்துவிடுகிறது. ஒரு சூரிய ஒளி முன்பு அகல்விளக்கு தன் ஒளியினை இழந்து நிற்பது இங்கே உவமையாகக் கொள்ளலாம். இறுதியில் அந்த தற்பரமே நிலையாகிவிடுகிறது. இந்த பதிகத்தின் பொருளாவது அழியாத அமுதே, ஞானமாகிய வடிவினை உடையவனே, சொல்லுவாயாக, தான் எனும் என்னை விழுங்கி, தான் அதுவாகி அந்த தற்பரம் நிற்கிறது இந்த நிலையினை நவில்வாயாக என்கிறார் அருணகிரிநாதர். - இவண் சௌந்தர்

எங்கும் நான்..

எங்கும் நான்.. 

நீக்கமற நிறைந்த 
நோக்கம் நான்!!! 

ஒரு பறவை 
தன் பேடுடன் கூடிடும் பொழுதில், 
கதிரவன் கதிர்கள் 
மலையினை தழுவிடும் பொழுதில், 
இனிய இசையில் 
இசைந்திடும் பொழுதில், 
என்னுள் பரவியிருக்கும் 
காதலின் பிரவாகதினை 
பருகத்தலைப்படாமல் 
எங்கோ எதிலோ அதனை 
தேடிடும் நொடிகளில், 
இறையின் கரங்களில் 
கரைந்திடும் பொழுதில்... 

என் நான் 
கரைந்து... 
கவிழ்ந்து... 
நானாகிறேன்!!! 

என் உள்ளிருக்கும் துணைதனை 
உடனிருக்கும் எனைதனை 
என்னுளிருந்து அல்லது 
அதனுள்ளிருந்து வெளிப்பட்ட நான் 
நான்!!! 

பிரபஞ்சபெருவெளிகளில் அலையும் 
ஒரு துகள் நான்... 
தேடலின் உணர்வு பெற்று 
தெளிய வந்திருக்கும் நான் 
நான்!!! 

இடையறாது 
சுணங்காது 
இந்த பிணைப்புச் சுழலில் 
சுழன்று 
அகன்று பின்னரும் சுழன்று 
அகன்று 
ஒரு நாள் அந்த 
பெருவெளியில் கலக்கவிருக்கும் நான் 
நான்!!! 

எத்துனை பிணைப்பு??!! 
எத்துனை பிடிப்பு??!! 
என்னை பிடித்திருக்கும் ஒவ்வொரு 
குணமும் 
நான் விலக்கியிருக்கும் 
ஒவ்வொரு குணமும் நான்!!! 

நான் நேசிக்கும் 
ஒவ்வொரு உயிரும் 
வெறுக்கும் 
ஒவ்வொரு உயிரும் நான்!!! 

என் இருப்பு அதனை 
ஊடுருவட்டும், 
உட்புகட்டும் 
ஒரு நாள் 
அதனின்று மீளட்டும்... சௌந்தர்

Tuesday, November 1, 2016

கந்தர் அநுபூதி - 1



முருக பக்தர்களுக்கு திருப்புகழ் இன்றியமையாதது. நிரம்ப பக்தி ரசமும், மொழி வளமும், மந்திர இயல்பும் ஒன்றியைந்து இருப்பது திருப்புகழ். இதன் சந்த நடை கேட்கும் அனைவரையும் ஆட்கொள்ள வல்லதாகும். அருணகிரிநாதர் கிளியாக மாறி, பின்பு அருளியதே கந்தரநுபூதி என்பர் அன்பர். யோக நெறியின் சாரமும், பக்திநெறியின் சாரமும் இயைந்து இருப்பது கந்தரநுபூதியாகும். இது ஒரு யோக நூல், பக்தி நூல், மந்திர நூல் எனினும் தகும். அப்படிப்பட்ட கந்தரநுபூதியில் நான் மிகவும் விரும்பிய பதிகங்களை இங்கு பதிவிடுகிறேன்.

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீ யலையோ
எல்லாமற என்னை இழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே! - கந்தர் அநுபூதி (அருணகிரிநாதர்)

"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்" என்பது இப்பாடலின் உயிர். எதிலும் மாற்றமில்லாத (நிலையில் திரியாதவன் இறைவன்), துன்பமில்லாத யோக வடிவினவன் இறைவன். யோகம் என்பது இறையுடன் நம்மை பொருத்தும் ஒரு உத்தி. இறை சார்ந்த சாதனைகள் எல்லாம் யோகமேயாம்! அப்படிப்பட்ட யோக மார்கத்தினை தன் சொல்லாலும் செயலாலும் அருளுபவன் இறைவன். முருகப்பெருமான் ஒரு யோக மூர்த்தி. சைவத்தின் சித்தாந்த நெறியில், சிறிது சாக்த நெறியின் தந்திர சாதனைகள் சேர்த்து தோன்றியதே கௌமாரம் எனும் முருக வழிபாட்டு நெறி (இது என் கருத்தேயாகும்- ஏனெனில் சைவ ஆகமங்களில் தந்திர சாதனைகள் மிகக்குறைவு, சாக்த வழிபாடுகளில் தந்திர சாதனைகள் மிகுந்து உள்ளது. அனால் கௌமார மார்க்கத்தில் யந்திர தந்திர முறைகள் உண்டு. சிவனுக்கு எந்தவித மூல மந்திரமும் இல்லை, நமசிவாய என்பது சிவ பஞ்சாட்சரம் எனினும் இது ஒன்றே சைவ மார்கத்தில் உள்ள மந்திரமாகும், சரபர் வழிபடு, பைரவர் வழிபடு எல்லாம் சைவத்தின் தந்திர முறைகளாய் இருக்கக்கூடும் என்பது என் கருத்து. அனால் முருகனுக்கு மூல மந்திரம் உண்டு. தேவியை உபாசிக்கும் அன்பர்கள் முதலில் உபதேசிக்கப்படுவது மஹாகணபதியும், பாலாவும் ஆகும் அவ்வாறிருக்க முருகனின் மூல மந்திரம் பாலாவின் பீஜாக்ஷரம் கொண்டும், மஹாகணபதியின் மற்றைய அக்ஷரங்கள் கொண்டும் விளங்குகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் கௌமாரம் பெரிதும் சைவ ஆகமத்துடனேயே தொடர்புள்ளதாக இருந்து வருகிறது) ஆதலின் முருகன் ஒரு யோகமூர்த்தியாக (குருவாக) இருக்கிறார் என்ன முதல் இரு அடிகளுக்கு பொருள் கொள்வதாகுக. தேவர்களுக்கும், இவ்வுலகிற்கும் தலைவனே, அப்படிப்பட்ட யோகநேறியினின்று என்னை, நானெனும் தன்மையினை இழக்க என் மனதிற்கு கட்டளை இடுவாயாக முருக என வேண்டுகிறார். நான் எனும் தன்மை உடையகால் மனம் உயிர்பெற்றுவிடுகிறது. மனம் உயிர் பெற்றால் அது நம்மை பரம்போருளினின்று பிரித்து விடுகிறது. தன்னை இழப்பதே நலம், நம்மை நாம் இழக்குங்கால், நம்மை நாம் இழப்பதை எவ்வாறு கண்டு கொள்வது? நம்மை இழந்தோம் என நாம் நினைக்குங்கால் மனம் உயிர்பெற்று பல விகாரமாகி மீண்டும் தன செயலினை செய்கிறது. இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அற்று தற்போது உள்ள பரமானந்த நிலையினில் நிற்பதே ஞானயோகமாகும். நம் மனம் மாய்ந்து போனது என எண்ணுங்கால், மனம் உயிர்பெற்று விடுகிறது. அவ்வாறிருக்க, தன்னை இழந்த நிலையினை சொல்ல வல்லவன் இறைவன் மட்டுமே என்பது காண்க. இறைவனே யோகா வடிவினன், அவனே யோகத்தினை வழங்கும் ஞான குருவும் ஆவான். ஆதலால் யோகா வடிவினான இறைவனை மனத்தினை மாய்க்க வேண்டுதலை உணர்தலே இப்பதிகத்தின் பொருள்.

Monday, July 25, 2016

யாரடி நீ மோகினி!!! - சிறுகதை


"பேய் இருக்கா? இல்லையா?" என்றான் கதிர். 
"இருக்கு டா"
"நீ எப்படி சொல்ற?"
"டேய், அது ஒரு சின்ன லாஜிக் தான் டா... இப்ப நீ கடவுளை நம்புறீயா இல்லையா?"
"இருக்காருன்னு நம்புறேன்..." கதிர் 
"கடவுள்னா, நமக்கு மேல இருக்கற ஒரு நல்ல சக்தி, நமக்கு மேல ஒரு நல்ல சக்தி இருக்கும் போது, தீய சக்தியும் இருக்கும் டா..."
"டேய் அப்படிப் பாத்தா கடவுளை யாரும் பாத்ததில்லையே"
"டேய் நீ கடவுள்னா  என்ன நெனச்ச?? கடவுள்ங்கிறது ஒரு உருவம் இல்ல, அது ஒரு இயக்கம், இந்த உலகத்தை நுட்பமா இயக்குற ஒரு தேர்ந்த இயக்கம் டா.. இந்த விநாயகர், முருகன் உருவம் எல்லாம் ஒரு தத்துவத்தையே, கருத்தையோ சொல்றது டா, அதனால தான் நம்ம அது உருவமற்ற அருவம்னு சொல்லற மாதிரி லிங்க வழிபாடு பண்றோம்"
"டேய் நீ என்ன சொல்ற, எனக்கு ஒன்னும் புரியல, அப்போ பேய்க்கும் இப்படி எல்லாம் ஏதாவது இருக்கா? அப்படீன்னா பேய்ங்கிறது என்ன?"
"இங்க பாரு கதிர், நீயும் ஒரு சைன்ஸ் ஸ்காலர் தான, உனக்கு தெரியும், இந்த உலகம் முழுதும் நிரம்பியிருக்கறது ஆற்றல்.. எனர்ஜினு சொல்லுவோம்.. ஒரு எனர்ஜிய நம்ம வேணுங்கிற மாதிரி மாத்திக்க முடியுங்கிறது தான் நவீன அறிவியல், எல்லா இடத்திலும் எனர்ஜி மட்டும் தான் இருக்கு."
"ம்ம்ம்..."
"இப்போ எத்தனையோ தொழிலநுட்பம் வெச்சு எனர்ஜிய ஒன்றிலிருந்து இன்னொன்னா நாம மாத்துறோம், இப்போ சூரிய வெளிச்சம் ஒரு வகையான எனர்ஜி, அதை நாம கரன்ட்டா மாத்துறோம்ல. கரண்ட்ட சத்தமா மாத்துறோம், ஆனால் அந்தகாலத்துல நம்ம முன்னோர்கள், முனிவர்களெல்லாம் அந்த ஆற்றல பல்வேறு யோக யுக்திகளின் மூலமா வசப்படுத்தியிருந்தாங்க"
"வசப்படுத்தறதுன்னா?"
"கட்டுப்படுத்தறதுனு அர்த்தம் டா கதிர், அந்தகாலத்துல நெறையா மந்திரங்கள், தாந்திரீக முறைகள் மூலமாகவும் இந்த சக்திகளை கட்டுப்படுத்த தெரிஞ்சிருந்தாங்க. உதாரணமா நாம மந்திரம் சொல்றோம்ல, அதுகூட திரும்ப திரும்ப சொல்லும்போது ஒரு அதிர்வா மாறும். அந்த அதிர்வு சேர சேர அது ஒரு சக்தியா மாறும். அந்த சக்தியை பல முறைகள்ல கட்டுப்படுத்தலாம், பல மூலிகைகள், யந்திரங்கள் இதெல்லாம் வெச்சு அந்த சக்திகளை அடையறது தான் பல மாந்திரீகர்கள் நோக்கமா இருந்துது. அதனால அவங்களால பல விஷயங்களை சாதிக்க முடியும்"
"டேய் இதெல்லாம் எப்படி டா சாத்தியம்? சைன்ஸ் படி ஒரு விஷயத்தை கண்ணால பாக்காம நம்ம எப்படி நம்புறது? அதுவும் இல்லாம நீ சொல்றது கேக்குறதுக்கு நல்லா இருக்கு, மத்தபடி.."
"டேய், இந்த ஏவல், பில்லி சூனியம் இந்த மாதிரி மாந்த்ரீகம் பத்தியெல்லாம் கேட்டிருக்கீயா  நீ?"
"கேள்விப்பட்டிருக்கேன்.."
"அதெல்லாம் என்னனு நீ நெனச்ச? பேய் பிசாசு பூதம் இதெல்லாம் ஒரு நெகட்டிவ் எனர்ஜி டா.. இந்த நல்ல எனர்ஜி கேட்ட எனர்ஜி ரெண்டையும் நம்ம வசப்படுத்தமுடியும், இந்தவகையான எனர்ஜிக்கு இந்த வகையான தன்மை இருக்கும்னு நெறைய இருக்குடா. நம்ம வீட்ல எல்லாம் கண்ணு பட்டிருச்சுன்னு சொல்லி சுத்தி போடுவாங்க பாத்திருக்கியா? 
"......."
"அது கூட ஒரு நெகட்டிவ் எனர்ஜி தான் டா... மத்தவங்க நம்மள பாத்து பொறாமைப்படும்போது, தப்பா நினைக்கும் போது, தவறா பேசும்போது நம்மள சுத்தி ஒரு நெகட்டிவ் எனர்ஜி இருக்கும் டா.. அதான் கண்ணுப்பட்டா குழந்தைங்க அழுதுட்டே இருக்கும்.
அதுவும் இல்லாம கை கால் வலி, உடம்பு வலி சோர்வுன்னு இருக்கும், இதெல்லாம் இந்த நெகட்டிவ் எனர்ஜியால தான்"
"டேய் நீ சொல்றத நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல..."
"இங்கபாருடா, நம்ம மதத்துல சர்வம் சக்தி மயம்னு சொல்றோமா இல்லையா, இன்றைய அறிவியலும் எல்லாம் எனர்ஜினு தான் சொல்லுது..."
"...."
"டேய் இதைப்பத்தியெல்லாம் அதர்வண வேதத்துல சொல்லியிருக்கு டா.. அதுவுமில்லாம நீ கந்த சஷ்டி கவசம் படிச்சிருக்கியா? அதுலயும் கொள்ளிவாய் பேய்களும்,குருளை பேய்களும், பெண்களைத்தொடரையும் ப்ரம்ம ராட்சசனும் அப்படீன்னு வருது"
"டேய் பேய்ல இத்தனை வகை இருக்கா??
"இது மட்டும் இல்லடா, கர்ணப்பிசாசு, யட்சிணி, மோகினினு நெறையா இருக்கு டா... நெறைய மாந்த்ரீகம் பண்றவங்க மந்திரங்களை உருப்போட்டு உருப்போட்டு இந்த தீய சக்திகளை வசியம் செய்வாங்க, இதுக்கு பல மூலிகைகள், பூஜைகள், யாகங்கள்னு இருக்கு..."
"யப்பா... டேய் என்னாடா இது... கேக்கவே பயங்கரமா இருக்கு.. அப்படி வசியம் பண்ணா என்ன செய்யலாம்?"
"உனக்கு என்ன நடக்கணும்னாலும் அந்த பேய ஏவி செய்துக்கலாம்.."
"அதென்னடா யட்சிணி?"
"அதுவா, அதுவும் ஒரு மாதிரி மோகினிப்பிசாசு தான். கல்யாணம் ஆகாம செத்துப்போன பொண்ணுங்க மோகினி, யட்சிணி னு மாறுவங்களாம்"
"டேய் போதும் டா... இதுக்கு மேல தாங்காது.. மணி பதினொன்னு முப்பது ஆகுது, நான் வேற லேப்ல தனியா வேலை பக்கவேண்டியிருக்கு, அதுவுமில்லாம இன்னைக்கு வெள்ளிக்கிழமை எங்க லேப்ல யாரும் இல்ல, ஊருக்கு போய்ட்டாங்க, இது வேற கட்டங்காடு"
"......"
"ஏற்கனவே எங்க பில்டிங் ஒரு பாழடைஞ்ச பங்களா மாதிரித்தான் இருக்கு, இதுல இங்க வேலை பாத்த ப்ரொபஸர் ஒருத்தர் வேற ரெண்டு வருஷம் முன்னாடி தான் செத்துப்போனாரு, இதெல்லாம் நெனைச்சாவே எனக்கு வயித்த கலக்குது. இதுல நீ வேற இன்னைக்கு இந்த பேய் பத்தின டீடைல்ஸ் கொடுத்திருக்க. போதும்ப்பா, நான் கிளம்புறேன்" என நடையைக் கட்டினான் கதிர்.
பல்கலைக்கழக சாலையில் மெதுவாக நடந்தவாறு தான் டிபார்ட்மென்ட் நோக்கி நகர்ந்தான்.
கும்மென்ற இருட்டு! அந்த இருட்டின் நிசப்தத்தை கிழிக்கும் சில்வண்டுகளின் சப்தம். மனித நடமாட்டமே இல்லாத நெடும் சாலை. இதெல்லாம் அவனை ஏதோ செய்தது. 
சரட்டென்று சாலையின் ஒருமுனையிலிருந்து மறுமுனையினை நோக்கி இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு ஒரு பொருள் பறந்து சென்றது.
டக்கென்று ஒரு கணம் அதிர்ந்தான் கதிர்.. 
அவன் இதயமே நின்றுவிட்டது...
அது என்னது தன்னைக் கடந்தது? 
அது என்னவென்று அறிய சாலையின் மறுமுனையினை அங்கு சூழ்ந்திருந்த இருட்டினில் உற்று நோக்கினான்.
ஒரு ஆந்தை.
"ச்ச்சீ... சனியன், இந்த நேரத்துல இதுவேற.." என தன் நடையினைத் தொடர்ந்தான். நடையினில் சற்று வேகம் கூடியது.
தூரத்தில் அவன் டிபார்ட்மென்ட் தெரிந்தது. விரைந்தான்.
அது வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டிடம், கதவுகள், படிக்கட்டுகள்,கைப்பிடிகள் எல்லாம் தேர்ந்த பர்மா தேக்கினால் செய்யப்பட்டது. மிகப்பெரும் கட்டிடம். உள்ளே சென்றுவிட்டால் எதுவும் தெரியாது. உட்புறம் நீண்ட வராண்டா. அறைகள் ஒன்றிற்கு ஒன்று எதிராக செய்யப்பட்டது. அந்த நீண்ட வராண்டாவிற்கு ஒரே ஒரு டியூப் லைட் வெளிச்சம் உமிழ்ந்துகொண்டிருந்தது.
அவ்வளவு பெரிய வராண்டாவிற்கும் ஒரு ஒரே ஒரு டியூப் லைட் போதாதோ என கதிருக்கு தோன்றியது. 
அவன் முதல் மாடியில் இருக்கும் தனது ஆய்வகத்திற்கு நடப்பது அவனுக்கே எதிரொலியாகக் கேட்டது. 
சற்று பயமிருந்தாலும், "ஆமாம், ரெண்டு வருஷமா இருக்கோம், இவ்வளவு நாள் வராத பேய் இன்னைக்கா வரப்போகுது? வந்தாலும் வாத்தியார் குடுத்த வேலையை பாதி பிரிச்சு குடுத்திருவோம், பயந்துட்டு போய்டும்" என நினைத்தவாறே தான் லேபை நெருங்கினான், லேப் திறந்திருந்தது.
உள்ளே அவன் ஜுனியர் ஆகாஷ் இருந்தான்.
"என்னடா இன்னும் ஹாஸ்டெல் போகலையா?"
"தோ கிளம்பிட்டேன் அண்ணா" என்றவாறு தான் லேப்டாப் எடுத்துவைத்துக் கொண்டிருந்தான்.
ஆகாஷ் பார்க்க சுமாரான பையன், எப்போதும் நெற்றியில் விபூதி வைத்திருப்பான். நிறைய கடவுள் பக்தி உள்ள ஒரு ரிசர்ச் ஸ்காலர். 
லேப் சற்று பழமையான தோற்றமுடைய ஒரு பெரிய அறை, கண்ணாடி குடுவைகள், கலர்கலராக நிறைய கெமிக்கல்கள். நிறைய அடைசல்கள். 
"நீங்க அண்ணா" என்றான் ஆகாஷ் 
"இல்லடா இன்னைக்கு கொஞ்சம் நெறையா வேலை, ஒரு முப்பது சாம்பிளுக்கு டய்ட்ரேஷன் போடணும், எப்படியும் காலைல மூணு இல்ல நாலு மணி ஆய்டும்"
"ஓகே குட் நைட் அண்ணா" என சொல்லிவிட்டு மறைந்தான் ஆகாஷ்.
மணி ஏறக்குறைய பன்னிரெண்டு ஆகிவிட்டதாக உணர்ந்தான் கதிர்.
என்ன தான் சமாதானம் செய்ய முயன்றாலும், கொஞ்ச நேரம் முன்பு நண்பனுடன் உரையாடிய பேய் உரையாடல் கண்முன்னே வந்து வந்து போனது. 
"ச்ச்சே, அப்படிலாம் ஒன்னும் இல்ல"
மீண்டும் ஒரு பயம் தன்னை அறியாமல் கவ்வியது. 
"சரி, கண்டதை யோசிக்காம வேலைய ஆரம்பிப்போம் என கண்ணாடிக்குடுவைகளை எடுத்து வைத்து தன் பணியினை செவ்வனே செய்யத் தொடங்கினான் கதிர்.
அப்போது அவன், நன்றாக மூக்கினை கூர்ந்து முகர்ந்து பார்த்தான். தனக்கு நேர்வது பிரமையா அல்லது உண்மையா என அவனால் நம்ப முடியவில்லை.
மீண்டும் தான் மூக்கினை கூறியதாகி முகர்ந்து பார்த்தான். 
"மல்லிகைப்பூ...."
"மல்லிகைப்பூ வாசம்..." தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். 
"இங்க எப்படி மல்லிகைப்பூ வாசம்? நம்ம லேப்ல ஒரு பொண்ணுகூட இல்ல... இல்ல நாம அதீதமா கற்பனைபண்ணிக்குறோம்" என தான் கற்பனையிலிருந்து விலகுவதாக நினைத்து மறுபடியும் முகர்ந்து பார்த்தான்.
"ஐயையோ, வாசம் வருதே..." என திபுதிபுவென்று லேபை விட்டு வெளியே ஓடினான்.
"இங்க வாசம் அடிக்குதா?" என தான் மொத்த மோப்ப சக்தியும் பயன்படுத்தி முகர்ந்தான்.
"இங்க ஒன்னும் வாசம் வரலையே", மெதுவாக லேப் கண்ணாடிக்கதவை திறந்தான். வாசம் வருவதாகத் தெரியவில்லை. உள்ளே இன்னும் போனான். ஒரு பச்சை நிற பீரோ அதனருகில் அவன் வேலை செய்யும் மேசை.
மெதுவாக முகர்ந்தான்... "வாசம் வர மாதிரி இருக்கு" என தான் வேலையை செய்ய ஆயத்தம் ஆனான்.
சில நொடிகள் கடந்ததும் மல்லிகைப்பூ நெடி நாசியினை நெருடியது. அவன் இதயம் படபடத்தது. 
"ஒரு வேலை ஏதாவது பேயோ, மோகினியோ..." வேகமாக வெளியே நடந்தான். 
"காக்க காக்க கனகவேல் காக்க" என முணுமுணுத்தவாறு முகர்ந்தான். மல்லிகை நெடி.
"யாராவது வெளையாடுறாங்களோ?" என யாராவது இருப்பார்களோ எனும் சந்தேகத்தில் வராண்டா முழுவதும் தேடினான். 
"யாரும் இல்லையே.. அப்புறம் எப்படி?" "மாடில யாராவது?"
படிக்கட்டுகளில் ஏறி மேல் மொட்டை மாடிக்கு சென்றும் அங்கும் யாராவது இருக்கிறார்களா என தேடினான் கதிர். கும்மிருட்டு, அந்த இருட்டின் இசைவில் காற்றின் இழுப்புக்கு நெடும் மரங்கள், பேய் போல தலைவிரித்து ஆடுவதாக தோன்றியது கதிருக்கு. 
மேலே மேகக்குவியல்கள், அதனினூடேயே வவ்வால் கூட்டங்கள் பறந்தது கொஞ்சம் கிலி கொடுத்தது. 
தான் பில்டிங் சுற்றியும் அடர்ந்த மரங்கள் ஆடுவதும், இந்த சூழலும் வனாந்தரம் தன்னுள் இருப்பதாக தோன்றியது.
வெட்டார வெளியில் சுற்றியும் முற்றியும் பார்த்தான். ஏதும் உருவம் உதவுகிறதா? எதிரே வந்தால் என்ன செய்வது என பதைப்புடன் சுற்றினான்.
யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 
"இல்ல இல்ல இது கற்பனை தான்... போய் ஒழுக்கமா வேலையை பாப்போம், கண்றாவி இனிமேல் இந்த பேய் சம்மந்தமா பேசவே கூடாது"
தான் லேபிற்கு வந்தான். வேலையை ஆரம்பிக்க எத்தனித்த போது மீண்டும் நாசியினைத் துளைத்தது மல்லிகை நெடி.
"ஐயோ கடவுளே எங்கிருந்து வருது இது?" லெப் சுற்றியும் பார்த்தான். எதுவுமிருப்பதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் நாசியினைக் கூர்மையாக்கி கொண்டு முகர்ந்தான். தனது மேசை அறைகள், மற்ற ஸ்காலர்களின்  மேசை அறைகள் என எல்லாம் திறந்து பார்த்தாயிற்று, மல்லிகை நெடி வருவது உறுதி. 
பிரமை என்றால் இவ்வளவு தொடர்ச்சியாக இருக்காது. 
"என்னமோ இருக்கு இங்க... ஆனா இவ்வளவு நாளா இப்படி ஒன்னும் நடக்கலேயே.." சொல்லவொண்ணா பயம் கதிரை சூழ்ந்தது.
அறையின் வெளிச்சத்திற்கு ஒரு வண்டு வந்து கண்ணாடிக்கதவில் மோதியது. அது கூட அவனை அதிரவைத்தது. 
"சரி,இனி இங்க இருக்கறது நல்லது இல்ல" 
"எதுவா இருந்தாலும் காலைல தான்... மேற்கொண்டு ஏதாவது நடந்தா நெஞ்சடைச்சு படுத்துட்டா நம்மள பார்ப்பதற்கு கூட ஆள் இல்ல, அப்படியே மூச்சு முட்டி போகவேண்டியது தான்" என கிளம்ப ஆயத்தம் ஆனான்.
எல்லா விளக்குகளையும் அனைத்து, கதவினை மூட பரபரத்தான். 
இன்னமும் இந்த மல்லிகைப்பூ நெடி வந்து கொண்டுதான் இருந்தது. 
வெளியே வந்தால் நெடி இல்லை. என்னென்னமோ யோசித்தும் பிடிபடவில்லை, அமானுஷ்யம், ஆன்மா, பேய், தீய சக்தி எல்லாம் உண்மை தானோ என்னவோ என வேகமாக வெளியேறினான். 
காலை பத்துமணி, கதவினைத் திறந்தான் கதிர். நாசியைக் குவித்து முகர்ந்தான். மல்லிகை நெடி இல்லை. ஒரே குழப்பம்.
என்னமோ, இனிமேல் நைட் வேலையே செய்யக்கூடாதுப்பா என நினைக்க ஆகாஷ் உள்ளே நுழைந்தான்.
"குட் மார்னிங் அண்ணா"
"குட் மார்னிங் டா..."
"வேலை முடிஞ்சுதா அண்ணா"
"இல்லடா நைட் கொஞ்சம் டையர்டு அதான் போய்ட்டேன், இனிமேல் தான் பாக்கணும்" என கதிர் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டே தனது லேப்டாப் பையை மேசை மீது வைத்தான். பிறகு மெதுவாக நடந்து அந்த பச்சை பீரோவிற்கு மேல் ஒரு நாற்காலி போட்டு ஏறினான். அதன் மேல் ஒரு சிவசக்தி படம், கீழிருந்து பார்த்தால் அப்படி ஒன்று இருப்பதே தெரியாது, ஏதோ ஒரு சாங்கியதிற்கு போல் அந்தப் படம் அங்கு இருந்தது. 
இரவு அதற்கு சூட்டப்பட்டிருந்த மல்லிகைச் சரத்தினைப் பிரித்தான்.
எதார்த்தமாக திரும்பிய கதிர் இதனைப் பார்த்து 
"டேய் நீ தான் நைட் மல்லிகைப்பூ போட்டதா?"
"ஆமாம் அண்ணா.. சும்மா ரூம்ல சாமி படத்துக்குப் போட வாங்கீட்டு வந்தேன், கொஞ்சம் இங்கையும் போட்டேன்"
"அடப்பாவி..."
"ஏன் அண்ணா?" என புரியாதவனாய் அப்பாவியாய் கேட்டான் ஆகாஷ்,
"ஒண்ணுமில்ல.. ரைட் விடு" என சிரித்தான் கதிர் தனக்கு மட்டுமே நடந்தவை புரிந்தவைகளாய்!!!

Saturday, April 16, 2016

என்னுள் நிசப்தமாய் நின்றவள்!!!

என்னுள் ஒலிக்கும் 
நிசப்தத்தின் இசை நீ!!!

ஆழமாய் என்னுள், 
என்னுள்ளே 
பொங்கிப்பிரவாகிக்கும் 
இசைப்பிரவாகம் நீ!!!

எங்கோ 
காற்றினில் கலந்துவரும்
இசையின் சுகம் போல...
உன் நினைவுகள்!!!

இந்தப் பிரபஞ்சப்புள்ளியில் 
ஒரு சிறு, 
மிகச்சிறு புள்ளியாய் 
இருக்கும் எனக்கு 
நீ தான் பிரபஞ்சம்!!!

என் கவிதைகள் 
ஒரு கிறுக்கல்கள் தான்...
ஒரு குழந்தையின் கிறுக்கல்கள் 
யாருக்கு தான் புரியும்???
ஆனால் அதை ரசிக்க 
ஒரு தாய்க்கு தெரியும்...

என் கிறுக்கல்களை ரசிக்க 
உனக்கு தான் தெரியும்!!!

எத்துனை சொற்களிருந்து 
என்ன பலன்???
சொல்லமுடியாத உணர்வுகள் 
உள்ளத்தில் ஆயிரம் இருந்து 
மொழிகளின் வெறுமையினை 
உணர்த்திவிடுகின்றன...

சில நேரங்களில் 
நிசப்தங்கள் 
என்னை 
என் உணர்வினை 
உணர்த்திவிடுகின்றன...

இன்னும்நான் 
ஆழ்ந்து பார்கிறேன்..
என் நிசப்தமெல்லாம் 
நீயாகி நிற்கிறாய்!!! - சௌந்தர் 

Friday, January 22, 2016

ஒன்றான ஒன்று!!



நீ ஒன்று!!!
உன் நிலை ஒன்று!!!
வாழ்வொன்று... வழியும் ஒன்று!!!

உன்னுள் ஒன்றாய் 
அரும்பும் உணர்வொன்று!!!

மனம் ஒன்று!!!
இந்தக்கணம் ஒன்று!!!

ஒன்றில் ஒன்றிய 
உயிர் நீ...

நன்றில் நனைந்த 
நதி நீ!!!

பலவாய் பரவிய பலவும் 
ஒன்றாய், உருவாய் 
உருவில் மருவி 
மறுவில் மயங்கும் மயக்கம் நீ!!!

இந்த மயக்கத்துயில் 
மறக்கத்துணியும் மணி நீ!!

மறக்கத்துணி 
இதை துறக்கத்துணி ஏனெனில் 
நீ ஒன்று!!!


ஒன்றாய் உருவான ஒன்று!!! - சௌந்தர்