Thursday, November 24, 2016

அம்மா சொல்லட்டும்னு காத்திருக்கோம்!!! சிறுகதை

"அப்போ முடிவா  நீ என்ன தான் சொல்ற?.."
"எனக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணா போதும்னு ஜாதகத்துல இருக்கு, அதுக்காக நீங்க இன்னும் மூணு வருஷம் காத்திருப்பீங்க, அதுக்குள்ள என் மனசு மாறும்னு நீங்க நெனைக்கலாம் ஆனா, அவ வீட்ல எப்படி காத்திருப்பாங்க?"
"......."
அவளுக்கும் என் வயசுல ஒரு அண்ணன் இருக்கான், அவன அவங்க பாக்குறாங்க"
"சரி.. இப்போ அதுக்கு"
"ஒண்ணுமில்ல, ஆனா ரொம்ப நாள் காத்திருக்க முடியாது...
இன்னும் ஒரு அஞ்சு மாசம், அப்புறம்..."
"அப்புறம்..."
"அப்புறம் நானே எதாவது முடிவெடுக்க வேண்டியதுதான்..."
"அப்படின்னா... நீ தனியா பொய் கல்யாணம் பண்ணிக்குவா?"
":.........."
"அப்போ... நீ எங்கள விட்டு போய்டுவ..."
"........"
"உனக்கு நானும் அப்பாவும் வேண்டாம்?"
"வேண்டாம்னா நான் ஏன் இத்தனை நாள் உங்ககிட்ட இப்படி கேட்டுட்டு இருப்பேன்..."
"இப்போ நீதானே சொன்ன, வேறமுடிவு எடுப்பேன்னு... நீ சம்பாரிக்குற... உன் முடிவை நீ எடுக்கலாம்"
"அம்மா ஏன் மா புரிஞ்சிக்கமாட்டேங்கற...?"
"இல்ல டா.. உனக்கு நாங்க முக்கியமில்லன்னு தெரிஞ்சிருச்சு, வேற என்ன செய்ய சொல்ற?"
"அம்மா, நீங்க  வாழ்ந்துமுடிச்சிட்டீங்க, எனக்கு இன்னும் ஐம்பது வருஷ வாழ்க்கை இருக்கு..."
"அது செரிப்படாது டா..."
"இப்போ என்ன விட சொல்றீயா? இல்ல அவளை விட்ருவேன்னு நெனச்சியா?? இல்லம்மா...என்னால முடியாது"
"சரி... நான் காலைல பேசறேன்... விடு..." அந்தப்பக்கம் போன் வைக்கப்பட்டது.
என்ன செய்வதென்று புரியாதவனாய், யோசித்தவாறே கெளதம் படுக்கையில் சாய்ந்து மீண்டும் யோசித்தான்.
எட்டு வருட காதல், பல்வேறு சண்டைகள், கோபங்கள், உணர்வுகள், பகிர்வுகள் என எத்துணை விஷயங்களைக் கடந்து இந்தக்காதல் எல்லாவற்றிற்கும் மேலான நட்பாகிப்போனது. ஆரம்பத்தில் திவ்யா சின்னச்சின்ன விஷயங்களைக் கூட அதிகமாக எதிர்பார்ப்பாள். என்னைவிட, என் காதலைவிட நான் பெரிதும் நேசிப்பது என் நட்பு, மனோ. ஒரு நாள் திவ்யா என்னிடம், "உங்களுக்கு மனோ பெருசா நான் பெருசா?"
டக்கென்று நான், "மனோ தான்.."
அவள் முகம் சுருங்கியது, "அப்போ நான் இல்லையா?" அழவே ஆரம்பித்துவிட்டாள்.
சமாதானம் செய்து அவளிடம், "இங்க பாரு, இன்னைக்கு நான் நானா இருக்கேன்னா, இந்த நிலைமைக்கு, என் வாழ்க்கைக்கு எல்லாம் மனோ மட்டும் தான். அவன் இல்லனா நான் ஒண்ணுமே இல்ல.. இன்னைக்கு நீ பாக்குற கௌதம் மனோவால வந்தவன்.. அத புரிஞ்சுக்கோ.. இப்போ சொல்லு, என்னக்கு யாரு மொதல்ல இருக்கணும்னு?"
கண்களை கசக்கிக்கொண்டே "மனோ அண்ணா தான்" என்றால் முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு. நான் சிரித்தபடியே அவள் முகத்தினை கைகளோடு என் நெஞ்சின் மீது இழுத்து அணைத்துக்கொண்டு..
"லூசு" என்றேன்.
அன்றிலிருந்து மனோ அவளுக்கு உண்மையான அண்ணணாகிப்போனான். அவனை திட்டினால்அவளிடமும், அவளைதிட்டினால் அவளிடமும் இடையறாது திட்டு வாங்குவது எனக்கு பழக்கமாகி போய்விட்டது. அதுவும் ஒரு சுகமாகிப்போனது. என்னை நேசிப்பதென்பது என்னை மட்டுமல்லாது, என்னை சார்ந்த உறவுகளையும், நட்புகளையும் மதிக்கும் தன்மையினை அவள் வளர்த்துக்கொண்டாள். என்னை புரிந்து, என்னைப் புரிந்தவர்களையும் நேசிக்கும் ஒரு நேசம் எனக்கு இடையறாது கிடைத்தது. அன்றிலிருந்து எங்கள் காதல் ஒரு அழகான நட்பாய் மலர்ந்தது. எவ்வளவு சண்டைகள் வந்தாலும் ஒருவரைவிட்டு ஒருவர் அகலாத தன்மை சேர்ந்துவிட்டது. எட்டு வயதாகிப்போனது எங்கள் காதலுக்கு. கல்லூரிக்காலங்களில் ஒரு சிறு அரும்பாக இருந்த உணர்வு, அந்த காதல் இன்று ஒரு கனகமெங்கும் நிறைத்திருக்கும் ஒரு காட்டுப்பூவாய் பரவி நிற்கிறது. அவள் ஒரு கண்ணாடி போல ஒரு கட்டத்தில் என்னைப் பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டாள். நான் சிரித்தாள் அவளும், அழுதாள் அவளும், தன்னை என்னுடையதாக்கிவிட்டாள். எனக்கு இன்னும் நான் அவளின் மேல் கொண்ட அன்பு குறைவோ எனும் எண்ணமே அவளின் அன்பினைப்பார்க்கும் பொழுது தோன்றுகிறது. 
"நானென்ன அவ்வளவு பெருசா? என்னையே பெரிய உலகஅதிசயம் மாதிரி என் இவ்வளவு நேசிக்குற" நான் கேட்கும்போது விழிவிரித்து கூர்மையாக என்னைப் பார்த்து மெதுவாக தலை ஆடுவாள். அதற்கு ஒவ்வொரு முறையும் நான் ஒவ்வொரு அர்த்தம் கொள்ளவேண்டியிருக்கும். நட்பாகிப்போன ஒரு காதல், அனால் இரு வீடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. என்னை மிகவும் புரிந்துகொண்ட அம்மாவும் அதே தீர்மானத்தில் தெளிவாக இருந்தாள். இதெல்லாம் மனதில் கண நேரத்தில் ஓடிக்கொண்டிருக்க, மீண்டும் அலைபேசி ஒலித்தது. அம்மா...
"சொல்லுமா..."
"சரி உன் முடிவை நீ சொல்லீட்டே... என் முடிவு..."
"........."
"இது தான் நான் கடைசீயா உன்கிட்ட பேசுறது..."
"ஏன் மா இப்படி பேசுற?"
"இல்ல கௌதம், நான் பழகிக்கணும்... நீ இல்லாம வாழ பழகிக்கணும்... ஒரே பையன் நீ, நீயும் எங்களுக்கு இல்லனு ஆயிட்டே.. இனி நான் தனி தான்..."
"மா..."
"அவளோதான்... இனி நான் பேச மாட்டேன்..." போன் வைக்கப்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி அடிக்கடி அம்மாவிடம் சண்டை போடுவது சகஜம் தான், காலையில் பேசிக்கலாம் என்று பல சிந்தனைகளில் தூங்கப்போய்விட்டேன். 
அம்மா... என் வாழ்க்கைக்கு மிகப்பெரும் நம்பிக்கை தந்தவள். திவ்யாவை நான் நேசிக்க ஆரம்பித்த மூன்றாவது நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். பள்ளிப்பருவ கைகூடாக் காதல் கூட ஒருமுறை அம்மா மடியில் துவண்டு புரண்டு அழ என்னை மறுபடியும் பழைய நிலைக்கு திருப்பினாள். எத்துணை காதல் கவிதைகள், காதல் படங்கள், நாவல்கள், அத்தனையும் அம்மாவுடன் சமையலறையில் நடந்துகொண்டே விவாதித்திருப்பேன். காதல் என்றால் என்ன, பெண் யார் எல்லாம் அம்மா கற்று தந்த பாடம்.  
ஒரு நாள் நடுசாமம், அம்மாவுடன் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருக்கும் போது,
"ஏம்மா... நீ போய்ட்டா என்னக்கு யாரும்மா... யாருகிட்டமா நான் இந்த மாதிரி பேசுவேன், இன்னொருத்தங்க உன்னமாதிரி என்ன புரிஞ்சிக்குவாங்களா? நான் அனாதையாய்டுவேன்ல மா" கண்ணீர் தழும்ப அழுதேன் நான்.
"அப்படிலாம் இல்லடா கண்ணா.. நான் இல்லன்னா யாராவது அந்த இடத்துக்கு வந்துருவாங்க.. இந்த உலகம் அப்படித்தான், யாரோ ஒருத்தங்க நமக்காக இருப்பாங்க. யாரும் இல்லாம போக மாட்டாங்க, உன்ன புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தங்க இருப்பாங்க" என்றாள். இருந்தும் அம்மா இல்லையென்றால் என் வாழ்வில் வரும் வெறுமை பற்றி யோசித்தேன். எனக்கு வாழ்க்கையை மிக அழகாக புரியவைத்தவள் அம்மா. அப்பா அன்பானவர் தான், அனால் பெரிதும் அவர் தாக்கம் என்னுள் ஏனோ பெரிதும் எழவில்லை. 
எனக்கு வேலை சென்னையில், பத்து மணிக்கு ஆபீஸ், ஏழு எட்டு ஆகிவிடும் வேலை முடிய, காலை உணவிற்கு முன்பொருமுறை, பின்பொருமுறை, மதிய உணவிற்கு முன்பொருமுறை, பின்பொருமுறை, இடையில் காபி சாப்பிடும் போது, சாலையில் நடக்கும் பொது, இரவு உணவு முடித்து ஒரு பெரும் நேரம் என அம்மா, அம்மா, அம்மா.. அவள் குரல். அருகாமை. 
என்னைக் கடந்து செல்லும் நண்பர்களெல்லாம் "என்ன ஜீ.. ஒரே போன் தான்.. எப்பவுமே.... ம்ம்ம்... நடத்துங்க..."
"எங்க நீங்க வேற, வீட்ல பேசுறேங்க.."
"வீட்லன்னா ... அவங்க கிட்டயா.."
"யோவ்... என் அம்மாகிட்ட பேசுறேன் யா... இந்தா நம்பர் பாக்குறீயா?" என்றால் நம்பிக்கை இல்லாமல் கண் சிமிட்டி செல்வார்கள். 
என்னுடைய தோழி போல், ஆசிரியர் போல், வழிகாட்டி போல் எல்லாம். இப்படி இருக்கும் அம்மா எப்படியும் எங்கள் காதலை ஏற்றுக்கொள்வாள் எனும் பெரும் நம்பிக்கை வைத்தது தான் இன்று பிசகாய் போய்விட்டது. அம்மா தலையசைத்தால், அப்பாவும் சம்மதிப்பார் என நினைத்து இருந்தது பெரும் பிழையாகிவிட்டது. வீட்டின் அரவணைப்பிலேயே இருந்துவிட்டு, இன்று ஒரு பெண்ணுக்காக வீட்டினை புறந்தள்ள நினைப்பது மிகுந்த வேதனை தான். ஆனால் சொந்தங்களுக்காக, சாதி சனங்களுக்காக என் வாழ்க்கையினை அடகு வைக்க வேண்டுமா? இன்னொரு பெண் வந்து என்னைப்புரிந்துகொண்டு என்னால் சுமுமாகமாக வாழ முடியுமா என்பதெல்லாம் யோசித்து யோசித்து, பின்னர் தான் சுயமாக வாழத்தலைப்பட்ட நினைத்தது. காதல் ஆரம்பத்தில் மிகப்பெரும் போதையாக, மகிழ்ச்சியாக இருந்தது, இருக்கிறது தான், அனால் இந்த சமூகம் இன்னும் காதலை ஒரு அங்கமாக பார்க்கப்பழக்கவில்லையோ என்று தான் தோன்றுகிறது. எத்துணை காதல் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள், இதுநாள் காதல் நாவல்கள், இருந்து ஏன் இத்துணை விஷயங்கள் காதலுக்காக என நினைத்தபோது ஒன்று மட்டும் புரிந்தது, இங்கு நாம் நமக்காக வாழவில்லை, யாரோ ஒருவர் சொல்லுக்காகவே வாழ்நாள் முழுதையும் அடகுவைக்கும் மடமை நம் சமூகத்தில் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆழ்மனத்திற்குள் இங்கு ஒவ்வொருவருக்கும் காதலிக்கும் வேட்கை, தீராத வேட்கை, அனால் அது இந்த சமூகக்கோட்பாடுகளுக்குள் சிக்காது ஆழ்மனதிலேயே புதைந்துவிடுகிறதாய் எனக்கு தோன்றியது. 
காதலைப்பற்றி, எத்துணையோ காதல் கவிதைகளை நான் எழுதும்போது, என்னை ஏற்றுக்கொண்ட அம்மா இன்று அது நடைமுறைக்கு வரும்போது விலக்க முற்படுவது எனக்கு முரணாய்பட்டது. எனக்கு நீ வேண்டாம் என எப்படி ஒருசில நொடிகளில் முடிவெடுத்து, "நீதாண்டா எனக்கு" என சொல்லிய அம்மா இன்று நீ வேண்டாம் போ என மறுத்தது எனக்கு புரியவில்லை. காதலும் அன்பும் எல்லைகளற்றது என்றால், நான் நேசிக்கும் ஒரு பெண் எப்படி நீங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியல், சமூகவியல் எல்லைகளுக்குள் வரமுடியும். என் வாழ்வின் எல்லைகளை நானே முடிவு செய்யவேண்டும் என்பதில் தவறு உள்ளதோ? அல்லது என்னை அன்பால் சிறை செய்து மீட்க நினைக்கிறாளா? அனால் எனக்கு அம்மாவைப் பற்றி நன்கு தெரியும், அவள் முடிவின் தீர்க்கம் நானறிவேன். எத்துணை தத்துவங்கள் பேசிய அம்மா இன்று அவைகளை புறந்தள்ளி, என்னையும் புறந்தள்ள துணிந்துவிட்டது என்னால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காலையில் அழைத்தாயிற்று, மாலையில், முதல்நாள், இரண்டாம் நாள் என ஒரு வாரம். அம்மா அழைப்பை எடுக்கவில்லை. கட் செய்தாள். அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது இந்த மாதம் குதிரைக்கொம்பு. 
அருகில் உள்ள நண்பன் மூலமாக, அம்மா பற்றி யாரோ ஒருவர் போல் விசாரித்துக்கொள்ள தான் முடிந்தது... அதற்குள் மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. 
திவ்யாவிடம் இதுபற்றி சொல்லவேயில்லை. அம்மாவுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு அவளுக்கு தெரியும், சொல்லி குற்ற உணர்வில் அவளை தத்தளிக்கவைக்க  விருப்பமில்லை. ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் வரும் அம்மாவின் அழைப்பின்றி என் வாழ்வும் வெறுமையாக உணர்ந்தேன். மனோ வேறு மாநிலத்தில், அலுவல் சுமை, வாரமொருமுறை அழைத்து அளவளாவுவதே மிகப்பெரும் விஷயமாகிவிட்டது. ஊரைவிட்டு வேறொரு இடத்தில் நம்மைக் கேட்கக்கூட நதியில்லா ஒரு சூழலில், அலைபேசி எத்துணை பெரிய வருமென்று ஒரு காலத்தில் உணர்ந்திருந்தேன் அனால் இன்று அதே அலைபேசி யாரும் அழைக்க ஆளில்லாது அநாதை போல் இருந்தது. ஒரு ஆண் எல்லா உறவுகளில் இருந்தும் எளிதில் மீண்டு விடுவான் அனால் அம்மா, மனைவி இது இரண்டும் அவனுக்கு மீள முடியாதது. இரண்டும் ஒரு பெரும் நட்பாய் அமைகிறபோது அவன் அதற்கு அடிமையாகவே ஆகிப்போகிறான். இரண்டும் எதிரெதிர் துருவங்களாகி நின்று விடுகின்ற போது ஒரு ஆணின் வாழ்க்கை நரகமாகிப்போகிறது அதே இரண்டும் ஒரே துருவத்தில் நிற்கின்றபோது அவனைப்போல ஒரு பலம் பொருந்தியவன் இருக்கவே முடியாது, அவனால் செய்யமுடியாது எதுவுமில்லை. ஆண் தசை பலத்தினை மட்டுமே நம்புபவன் அல்ல, வாழ்வில் வெற்றிபெறத்துடிக்கும் ஒவ்வொரு ஆணும் ஏங்குவது மனோபலத்திற்குத்தான். அம்மாவையும், திவ்யாவையுமொரு துருவமாக்கிடத்தான் நான் பெரிதும் ஆசைப்பட்டேன். என்னைப் போல எல்லா ஆண்களும் அதைத்தான் ஆசைப்படுவார்கள் என்று தோன்றியது. யாரோ ஒருவர் நம்மை நினைத்திருக்கிறார்கள் என்பது வாழ்க்கைக்கு மிகப்பெரும் பலம். மரணமென்பது நம் உடலால் அழிவதில்லை, யாரோ உள்ளத்திலிருந்து நம்மை எடுத்துவிடும்போது அங்கு நமக்கு மரணம் சம்பவித்துவிடுகிறது. அம்மாவுக்கு நான் வேண்டாமா? அவ்வளோதானா.. கௌதம் வெறும் நடைபிணமா... திவ்யாவுடன் பேசுவதும் குறைந்தது. 
"ஏன் சரியா பேசுறதில்ல நீங்க?"
"..... ஒண்ணுமில்ல...."
"இல்ல, என்ன ஆச்சு மா?"
"அம்மா பேசறதில்ல..."
"என்ன ஆச்சு?" அதிர்ந்தவளாய் கேட்டாள்.
"நான் வேண்டாமாம்... என்னை தூக்கி எறிஞ்சுட்டாங்களாம்... நான் இல்லாம வாழப்பழகிக்கரங்களாம்.."
"வீட்டுக்கு போயிட்டு வாங்க.. எல்லாம் சரியாயிடும்"
"இல்ல திவ்யா... போகணும், எனக்கு என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்குற உரிமைகூடவா இல்ல... நான் என்ன தப்பு பன்னினேன்? நான் என்னைவிட அவங்க மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தேன், என்னைப் புரிஞ்சு நம்ம காதல ஏத்துக்குவாங்கன்னு.."
"......."
"எவ்வளவோ தத்துவங்கள் பேசுறாங்க ஆனா நடைமுறைக்கு வர்ரப்போ எந்த தத்துவமும் எடுபடறதில்ல.. நானென்ன பொம்மையா? இவங்க சொன்ன மாதிரியே உட்காரணும்னு. எனக்கும் எல்லாம் இருக்கு, சரி விடு எனக்கு ஒன்னும் சொல்ல தோணல... ஒரே ப்ளாங்கா இருக்கு..."
"நான் ஒன்னு கேட்டா கோவிச்சுக்க கூடாது"
"சொல்லு"
"இல்ல, என் மேல கோவம் வரலியா? என்னால தான் இதுனு...."
"இல்ல... இது நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து எடுத்த முடிவு, ஒண்ணா வாழானும்னு... நீயும் உங்க வீட்ல இத சொல்லி ரொம்ப கஷ்டப்படுற! இதுக்கு உன்ன மட்டும் எப்பிடி பொறுப்பாக்க முடியும், அது ரொம்ப தப்பு. யார் மேலயும் தப்பு இல்ல. அவங்களுக்கு அவங்க சொல்றபடி அவங்க பையன் கேக்கணும், நமக்கு நம்ம விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கணும். யாரையும் தப்பு சொல்றதுக்கில்ல திவ்யா..."
"........."
"விடு நான் அப்புறமா பேசுறேன். என்னக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்." என்று போனை வைத்தான் கௌதம். என் தரப்பு நியாயங்கள், கூச்சம் என வீட்டிற்கும் செல்ல ஒரு தயக்கம். 
இந்தத் தனிமை சில வாரங்களிலிருந்து பல மாதங்களாகிவிட்டன.... சௌந்தர்

4 comments:

  1. Very nice story.. exact resemblance of present day love... exact feel of guys.. story little bit felt lengthy when the guy describing about her attachment with his mother... overall its very nice reflection of guy's heart.

    ReplyDelete
  2. Really very hurting and true story. We have to live for others. Not for us. Thats life. Nice story written by you Dr.Soundar

    ReplyDelete