Tuesday, August 22, 2017

என் அகப்பொருளுக்கு!!!



என் 
முதற்பொருள்,
கருப்பொருள், 
உரிப்பொருளாகிவிட்ட என் 
அகப்பொருளுக்கு...

உன்னைக் கண்டபிறகு...
நீயே என்மொழியான பிறகு...

உன் நினைவுகளின் தழுவல்களின் 
தழும்பல்களில் 
என்னைத் தழுவிய தமிழும் 
அந்நியமாகிவிட்டாள்!

உன் காலடிநிலத்தின் வாசத்தில் 
வசப்பட்டுவிட்ட எனக்கு 
இன்றுதான் புரிந்தது 
மண்ணுக்கு வாசம் 
மழைப்புணர்வதால் அல்ல - உன் 
நடைபுணர்வதால் என்று!!!

இரவு முழுதும் 
உன் நினைவும் என் கனவும் 
கலப்பதில் 
பொழுதை போக்கிக்கொள்கிறேன்...
உன் காலடி நிலமும் 
உன் நினைவுப்பொழுதும் - என் 
முதற்பொருளென்பதால்!!!
உன் பார்வைகளின் பதியலில் 
காலமும் எனக்குச் சிறுபொழுதுதான்!!!

என் கதறலில் 
நீ செல்லும்போது 
கனம் கூடப் பெரும்பொழுதாகிவிடுகிறது!!!

என் மனநிலத்தில் 
உன் நினைவுச்சுனை - இங்கு 
கவிதை வெள்ளமாக!!!

நீயே தெய்வமாகிவிட்ட இடத்தில் 
தெய்வங்களுக்கென்ன வேலை??!!
என் கவிதைப்பண்கள் 
உன்னையே பாடுவதால்!!!

குறிஞ்சியாழோ விளரியாழோ 
வைத்து மீட்டவல்லாது  நான் 
என் விரல்களை - நீ 
பறித்துப்போனதினால்!!!

ஆனால் 
நான் இசையற்றவன் 
என நீ இயம்பிவிடாதே...
என் இசைக்கடவுளே நீதானெனும்போது!!!

'உன் தொழில் என்ன?' எனும் கேள்விகளுக்கு 
உன்னைக் காதலிப்பது என 
மறுத்தலிக்காமல் 
விடைவருகிறது எண்ணில்!!!

காதல் மலையின் மேல் 
நின்றுகொண்டிருக்கும் எனக்கு 
குறிஞ்சித்திணை பொருந்தும் தான்...
நித்தமும் உன் நினைவுகளில் 
புணர்ந்தாலும் அந்தப் 
புணர்தல் நிமித்தத்தாலும்!!!

நீ சென்றுவிட்ட பிறகு 
உனக்கென நான் 
நானாக அல்லாமல் 
இருந்துகொண்டு....
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் 
இருத்தலால்...
முல்லையே உனக்கென 
நான் பூண்டுகொண்ட முல்லைத்திணை!!!

என்னிடம் நீ கொண்டிருப்பது 
பிரிவல்ல - அது 
ஊடல்!!!
சிறுபிறை வாணுக்கணிபோல் 
இச்சிறுகுறை 
நம் காதலுக்கழகு!!!
என்னை ஊடியது 
உன் உடல்தான்!!!
நானும் நீயும்தான் 
உள்ளமொன்றாய் உறைந்துவிட்டோமே!
உடலிடை வந்த ஊடலுக்கு சாட்சியாக 
நானும் மருதத்திணையில்!!!

நீ கொடுத்துச்சென்ற மகிழ்வைவிட 
விடுத்துச்சென்ற 
துயரங்கள் அதிகம்!!!
உன் ஊடலால் 
நான் இங்கு ஏங்கிஇளைத்து 
இரங்குவது 
கடலலை போல் உன்நினைவு 
என் இதயமணற்பரப்பை 
தொடுவதில் 
உனக்கு நெய்தலாகிவிட்டேன்!!!

நீயே உயிராகிவிட்ட எனக்கு 
உயிரே பொருளாகிவிட்ட 
என் காதலுக்கு 
பாலைத்திணை வேண்டாம்!!!
அது தான் சொன்னேனே 
இது ஊடேலென்று...

என் உயிர்பிரிந்தாலும் 
உன் நினைவுபிரியாததை 
எந்தத் திணைகொண்டு நான் 
விளக்கமுடியும் 
விளிக்கமுடியும்.... - சௌந்தர்