Saturday, February 11, 2017

கண்ணனுக்கு ராதையின் கவிதை மடல்



அன்புக் கண்ணா...
என் கண்ணீர்கசிவுகளினூடே 
இந்தக் கவிதை!

உன்னால் ஸ்பரிசிக்கப்பட்ட ராதை 
உனக்காக எழுதுவது!!!

உன் நீலநிறமேனியில் 
என் கண்களின் கருமை 
அப்பியிருந்தது - இன்று 
அழிந்துவிட்டதா?

உன் பாதங்களின் தூசுகளில்கூட 
என் இதழ்களின் தடங்கள்  
பதிந்திருந்ததை என்னவென்று சொல்லுவேன்....??!!

ஆடைஇழந்த என்னை 
அள்ளியொரு பூப்போல- நீ 
அணிந்துகொண்ட நாட்கள் 
என்னிலிருந்து நகரமறுக்கின்றன!!!

கண்மூடி என்மீதுறங்கிய 
உன்னை
ஒரு குழந்தையாய் குவித்து - உன் 
தூக்கம் கலையாது 
முத்தமிட்ட நாட்கள் 
நகரமறுக்கின்றன!!!

கள்வனென்று சகலரும் - உன்னை 
சொன்னபோதும் - என் 
கண்கள் உனக்கு காவலாகின...

ஒற்றைசடையில் 
கற்றையாய் உன்னை 
உடுத்திக்கொண்ட என்னை 
அந்த பிருந்தாவனத்தில் 
மண்துகள்கள்கூட மறக்கவில்லை!!!

அன்று 
நீ தழுவிய 
தடங்கள்...
இதுவே..
இதனுடனேயே 
நாம் இணைந்திருந்த 
இந்த மண்ணினோடும்...
மழையினோடும் 

அதிகாலையில் 
நீ தழுவியத்தைக்கண்டு 
அகவிய மயில்களோடும்...
நம் இணக்கம்கண்டு 
கூவிய குயில்களோடும் 
இருந்துவிடுகிறேன்....

இவள் 
உன் ராதை....
- சௌந்தர் 

Monday, February 6, 2017

என்தோள் படர்ந்த உன் தொடர்பு!!! - சௌந்தர்



கதிரவன் தன்கைகளை சுருட்டிக்கொண்டு 
காரிருள்தனை கவிழ்த்துவிடும் வேலை...

இரைதேடப் பரவிய புள்ளினங்கள் - தன் 
இனத்துடன் இணங்கிடும் வேலை...

மதங்கொண்ட ஒற்றைக்களிறு பசிபெருகி 
கருப்புக்கொள்ளையதனில் புகுந்தநொடி...

ஒற்றை நிலவின் வெளிச்சமும் 
வெளிகளின் வேலிகள்கூட நம்மை 
துளைக்கவொண்ணா இணைக்கமது!!!

என்னடர்ந்த தோள்மீதுனது கற்றைக்குழல் 
படர்ந்திருந்தது இரவின்  இனிமையினை 
இன்னுமொருமுறை சொல்லியது!!!

ஆளுமைக்காகவே படைக்கப்பட்டது ஆண்மை 
எனும் ஆதிக்கஆகமங்கள் அழிந்து...
அன்பினை ஆளுவதே ஆண்மையெனும் 
ஒரு புதியஆத்திச்சூடி புரிந்தது!!!

இன்று என் தனிமைகளில்கூட
என்தோள் தழுவிய உன்கைகளும் 
கற்றைக்குழலும் கண்ணீர்துளிகளும் 
படருவதாய்ப் படுகிறதடி!!!  - சௌந்தர்