Thursday, April 6, 2017

எங்கே போகிறது இந்தப்பாதை!!!

ஒரு அடர்ந்தவனம், மிகவும் அடர்ந்தவனம். அதனுள் ஒரு பயணம். என்னுடன் ஒன்றாக நகரத்துள் பயணத்தினை தொடங்கியவர்கள் இன்று யாரும் என்னுடன் இல்லை. அவர்கள் ஒரு கட்டத்தில் அவரவர் பாதைகளைப் பகுத்து தேர்ந்தெடுத்துக்கொள்ள தலைப்பட்டு, தேர்ந்தெடுத்து நகர்ந்துவிட்டனர் என்றே உணர்கிறேன். இந்த வனம் அடர்ந்து, வெளியிலிருந்து பார்க்க வெளிச்சத்தின் சுவடுகள் இருப்பதாகக் கூட தெரியவில்லை. இங்கேயே இந்த வனத்திற்கு முன்னரே நான் தங்கிவிட்டால் என்னை கேள்விகேட்க ஒருவரும் இல்லை அனால், என் கேள்விகள் என்னைப்பற்றியே இருக்கின்றன. நான் எனக்கே கேள்விகளை கேட்டு பதிலும் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உணர்கிறேன். வேறு எவரேனும் கேள்விகள் கேட்டால் நான் பொய்யுரைக்கலாம், ஆனால் எனக்கே எப்படி நான் பொய்யுரைப்பது? இன்றைக்கு இங்கே தங்கலாம், இன்னும் சில நாட்கள், வாரங்கள், மாதங்கள்  ஏன் சில வருடங்கள் கூட தங்கலாம் அனால் எப்படி ஜென்ம ஜென்மமாக, யுக யுகங்களாகத் தங்குவது? என்றாவது ஒருநாள் இந்த அடர்ந்த கானகத்தினைக் கடந்தே தீரவேண்டும். அது தான் முடிவு என்றபோது, இங்கே இருப்பதில் எந்த பயனும் இல்லை என்றே தோன்றுகிறது. நான் இந்தப்பயணத்தினைத் தொடங்கிய பொழுது, என்னுடன் பலரும் இருந்ததாக நினைவு. நிறைய பேருக்கு இந்தப்பயணம் செய்ய தேவைகள் இருந்து, வரும்வழிகளில் எங்கோ தங்கிவிடுவதில் ஒரு சுகம் ஏற்பட்டு பலபேர் ஆங்காங்கே இளைப்பாறவும், இன்னும் பலபேர் அங்கேயே இருந்துவிடவும் முடிவெடுத்தனர். இருந்தும், அது முடியாதது. என்றாவது ஒரு நாள் அவர்கள் அந்த இடத்தினையும் காலி செய்துகொண்டு இங்கே வரத்தான் வேண்டும். இந்த இடத்தின் சிறப்பே இங்கு யாரும் குழுவாக வரமுடியாது என்பதுதான். அப்படிவந்தாலும் இதற்கு மேல் குழுவாக பயணப்பட முடியாத வனம் இது. இன்னும் பலபேர் ஆரம்பத்தில் குழுவாக இருக்கப்பழகி, குழுவாகவே பயணமும் செய்து, குழுவாகவே இந்த கானகத்தினையும் கடக்க எண்ணுகின்றனர், அனால் இங்கே குழுவாக செல்ல இயலாது என்று அறிந்த பின்பு தனியாக செல்லத்தயங்கி இங்கேயே தங்குகின்றனர். எப்படி இருந்தாலும் ஒரு நாள் இங்கிருந்து தனியாகவே உள்ளே பயணப்படவேண்டியிருக்கும். அப்படி என்ன தான் இருக்கிறது இந்த வனத்தில்? முன்னே சென்றவர்கள் உள்ளே சூனியம் இருக்கிறது என்கிறார்கள், எதுவுமேயில்லாத ஒன்று இருக்கிறதாம். இல்லாததைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்றும் நினைக்கலாம்... இருப்பதை எதிர்ப்பதோ, அறிவதோ என்பது எளிதாக இருக்கின்றது. ஸ்தூலத்தினை நோக்கிய இலக்கு எளிது, ஆனால் சூட்சுமம் நிறைந்த இலக்கு எங்கிருந்து வரக்கூடும் என்றே அறிவதற்கு வழியில்லை. கண்ட ஒன்றைப் பற்றி சொல்லுவதே கடினம் எனும்போது, காணாத ஒரு இலக்கு கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. என்னுடன் சிலர் சேர்ந்து ஒரே வாகனத்தில் இந்த வனம் நோக்கி பயணிக்கத்துவங்கினோம். இன்னும் எனக்கு தெரிந்த சிலர் வேறு ஒரு வாகனத்தில் எங்களைக்காட்டிலும் வேகமாக பயணத்தினைத் தொடர்ந்தனர். இன்னும் சிலரோ வந்தடையவேண்டிய இலக்காண இந்த வனத்தினை மறந்து தங்கள் வாகனமே சிறந்தது என்று பிறருடன் வாதிட்டு, வன்மம் வளர்த்து, மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே சென்று மோதிக்கொண்டனர். அனால் இன்னும் சிலரோ வாகனத்தினை உதற வேண்டிய எல்லைவந்ததும் அதை உதறி வனம் நோக்கி தனியாக நடந்து, ஒன்றுமில்லா ஒன்றில் சென்று சேர்ந்துவிட்டனர். அப்படி சென்று சேர்த்தவரின் வழியினை இன்னும் சிலபேர் அழகாகப் பயன்படுத்தி அவர்களும் ஒன்றுமில்லா ஒன்றில் இந்த வனம் கடந்து ஒன்றிவிட்டனர். இன்னும் சிலர் ஒன்றியவர் கருத்துகளையும், அவர் வழியும் மறந்து ஒன்றுபடாமலே நான் ஒன்றியவன் என்று தம்பட்டம் அடித்து பலருக்கு வழிகாட்டுகிறேன் என்று வழிமாற்றிவிட்டுவிடுகிறார்கள். இந்தப்பயணத்தினை புதிதாக ஆரம்பிக்கும் பலரும் இந்த ஒன்றுமில்லாத ஒன்றுகளிடம் மாட்டிக்கொள்கின்றனர். இவர் தங்களை கால் நோகாது, கை நோகாது வனம் தண்டி அழைத்து செல்வர் என்றே நம்புகின்றனர். அனால் உண்மையில் இந்த வனத்திற்குள் எவர் தயவும் எடுபடாது. தனிப்பயணம் தான் ஒரே வழி. காலாற நடக்கத்தெரிந்தவருக்கே இந்த கானகம் வழி கொடுக்கும். நானும் நான் வந்த வாகனத்தினை விட்டுவிட்டு வந்தேன், இங்கு அது பயன்படாது, என் கால்கள் மட்டுமே துணை. நான் பயணப்படும் முன்னர் என்னை பலரும் விகாரமாக பார்த்தனர். இன்னும் கொஞ்சகாலம் கழித்து போகலாம்... இப்போதென்ன அவசியம் என்றனர், அனால் அவர்கள் எல்லோரும் பலகாலம் அங்கேயே அப்படி சொல்லிக்கொண்டே இருக்கின்றனர் என்பது பின்னரே எனக்கு புரிந்தது. இன்னும் என் நெருங்கிய உறவுகள் எனும் மனிதர்கள் தங்களை விட்டு நான் செல்வது பெரும் துயர்போல அரற்றினார்கள், நான் புறப்பட்டு ஓரிரு நாட்கள் துக்கம் மேலிட்டதாய் இருந்தார்கள் அனால் மூன்றாவது நாள்முதல் அவர்கள் மீண்டும் தங்கள் அலுவலுக்கு திரும்பியிருந்தார். என் இலக்கு பயணப்படுவது என்று எவ்வளவு தூரம் சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, பின்னர் அவர்களை எப்படி சமாதானம் செய்தாலும் அவர்கள் ஏற்கும் மனப்பக்குவதில் இல்லை என்று, என் காலம் தாழ்த்தாது என் பயணத்தினைத் தொடங்கினேன். என் பெயர், பதவி, பட்டம் எனும் இத்தியாதிகள் நான் பயணப்படும் தொடக்கத்தில் இருந்தது, இன்று அவை எல்லாம் அர்த்தமற்றவையாக என்னிலிருந்து கழன்று நகர்ந்துவிட்டன. இன்னும் நான் எனும் ஒன்று என் தோளின் மீது சற்று சுமையாய் இருக்கிறது, அதையும் இந்த கானகம் கடக்கும்போது எங்கேனும் கழற்றி வைத்துவிட்டு நடக்கவேண்டும். கொஞ்சம் பயமும், பதட்டமும், என்னுடன் பயணத்தினைத் தொடங்கியவர்கள் நினைவுகளும் இன்னும் எனக்குள் இருக்கின்றன, அனால் இந்த கானகம் கடக்கும்போது அந்தச்சுமைகளும் கழற்றி வைத்துவிடவேண்டும். அவைகளை சுமக்க சுமக்க இந்த கானகத்தின் பாதையும் நீண்டுகொண்டே போகுமாம். எவ்வளவு விரைவில் அவற்றினை இறக்கிவைக்க வேண்டுமோ அவ்வளவு விரைவில் அதனை நான் செய்துவிடவேண்டும் என்று புரிகிறது. இந்த நெடும் காட்டில் என் முதல் அடியிணை இப்போது வைக்கிறேன், விரைவில் இந்த கானகம் கடந்து ஒன்றுமில்லா ஒன்றில் ஒன்றிவிடப்போகிறேன். - சௌந்தர்