Showing posts with label கந்தர் அநுபூதி. Show all posts
Showing posts with label கந்தர் அநுபூதி. Show all posts

Thursday, November 3, 2016

கந்தர் அனுபூதி - 2 ஞானாகரனே நவிலத்தகுமோ

அன்பர்களுக்கு வணக்கம், 

ஆனா அமுதே அயில்வே லரசே 
ஞானா கரனே நவிலத் தகுமோ 
யானாகிய வென்னை விழுங்கி வெறுந் 
தானாய் நிலைநின் றதுதற் பரவே. கந்தர் அநுபூதி 28 (அருணகிரிநாதர்) 
ஞானாகரன் என அருணகிரியார் முருகப்பெருமானை விளிக்கிறார். கருணாகரன் - கருணையே வடிவானவன், அதை போல ஞானாகரன் என்பவன் ஞானத்தின் வடிவெனலாம். இப்பதிகத்தில் அருணகிரியார் முருகப்பெருமானிடம், "ஞானமே வடிவானவனே" என விளித்து தற்பரத்தின் தன்மையினை விளக்குகிறார். அதற்கு முன்பு, ஞானாகரன் எனும் சொல் அழகும் பொருளும் ஒருசேரப் பொதிந்ததாக உள்ளது சிறப்பு. முருகப்பெருமானின் வடிவம் என்னவென்றால் ஞானம். ஞானம் பார்க்கவொண்ணாதது அனால் உணரக்கூடியது. மனிதனுக்கு மூன்று அந்தகரணங்கள் உள்ளன அவைகள் மனம், சித்தம்,புத்தி. இவை மூன்றுமே கண்களால் காண முடியாதது ஆனால் உணரக்கூடியது. இறைவன் மூன்றையும் கடந்து விளங்குபவன். நம் உடலில் ஒவ்வொரு ஆதார சக்கரங்களையும் நம் ஜீவாதார சக்தியான குண்டலினி கடக்க கடக்க ஒவ்வொரு அந்தகரணத்தையும் நம் ஆன்மா கடக்கிறது. ஆக்ஞா என்னும் ஆதார சக்கரத்தினை கடக்கும் போது புத்தி எனும் அந்தகரணம் கடக்கபட்டு சகஸ்ராரம் அடையப்படும் போது ஞானம் கிட்டுவதாக யோக நூல்கள் சொல்கின்றன. இங்கே இறைவன் அந்தகரணங்களையும் கடந்த நிலையினையே ஞானாகரன் என சுட்டுகிறார் அருணகிரியார். அப்படிப்பட்ட ஞானாகரனிடம் தற்பரத்தின் இயல்பினை விளக்கசொல்வது சொல்வது அறிவின் உச்சம். "யானாகிய என்னை விழுங்கு வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே" எனும் வரிகள் ஞானத்தின் உச்சம்.தற்பரம் எனும் சொல் மிகுந்த தத்துவார்த்தமானது. தன் + பரம், தற்பரமானது, தன் + பெருமை தற்பெருமை என்றாவது போல தற்பரமும் ஆனது. பெருமை என்பது ஒருவரை அல்லது ஒரு விடயத்தினைப் பற்றிய உயர்வான எண்ணம். தற்பெருமை என்பது இந்த எண்ணத்துடன் அகங்காரம் சேர்ந்துவிட்டால் அது தற்பெருமையாகிறது. பெருமை பேருடைத்து அனால் தற்பெருமை என்பது அகங்காரத்தின் கலவையாதலால் அது அழிவிற்கான ஒரு பொருளாகிறது. பரம் என்பது இறைவன். எந்த ஒரு தன்மையுமற்ற, செயலுமற்ற சுத்த நிர்குணமுடைய பரம்பொருளாகும். இதனை லலிதா சஹஸ்ரநாமம் "நிர்குணா" என விளிக்கிறது. அப்படிப்பட்ட எந்த தன்மையுமற்ற பரம்பொருள், தானாக எந்த செயலும் செய்யாதது. ஆதியில் உலகம் தோன்றிடும் முன்பு, ப்ரம்மம் ஏதுமற்று, செயலற்று பரமாக இருந்தது. இந்த சுத்த பரமானது ஏதும் செய்யவொண்ணாதது, எந்நேரமும் பேரின்பத்திலேயே பெரிதும் திளைத்து இடையறாது மோனநிலையினின்று இருப்பது. இந்த பரம் இவ்வுலகினை இயக்கும் திருவுளம் கொண்ட போது தான் எனும் தன்மை பெற்று பின்னரே அது தன்னிலிருந்து பல்வேறு விக்ருதிகளை (பல தேவர்களையும், தேவதைகளையும்) பிரமன் முதலாய படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் தெய்வங்களும் தன்பாற் உண்டாக்கியது. தான் எனும் இயல்பு சேர்ந்து, தற்பரமாகிறது. அப்படிப்பட்ட பரம், தான் எனும் தன்மை பெற்று தற்பரமாகி இவ்வுலகினை இயக்குகிறது. யான் என்பது அகங்கார நிலை, ஒரு ஞானி என்பவர் அகங்கார நிலையினை விட்டவராவர். அந்த அகங்காரம் எப்படி அழிக்கபடுகிறது என்றால் அதைவிட பெரிய அகங்காரம் ஒன்றால் விழுங்கப்படவேண்டும். அப்படியான தற்பரம் விழுங்கும் பொது, இந்த சிறிய "நான்" அந்த பெரிய நானான தற்பரத்திடம் ஒன்றாகி கலந்துவிடுகிறது. ஒரு சூரிய ஒளி முன்பு அகல்விளக்கு தன் ஒளியினை இழந்து நிற்பது இங்கே உவமையாகக் கொள்ளலாம். இறுதியில் அந்த தற்பரமே நிலையாகிவிடுகிறது. இந்த பதிகத்தின் பொருளாவது அழியாத அமுதே, ஞானமாகிய வடிவினை உடையவனே, சொல்லுவாயாக, தான் எனும் என்னை விழுங்கி, தான் அதுவாகி அந்த தற்பரம் நிற்கிறது இந்த நிலையினை நவில்வாயாக என்கிறார் அருணகிரிநாதர். - இவண் சௌந்தர்

Tuesday, November 1, 2016

கந்தர் அநுபூதி - 1



முருக பக்தர்களுக்கு திருப்புகழ் இன்றியமையாதது. நிரம்ப பக்தி ரசமும், மொழி வளமும், மந்திர இயல்பும் ஒன்றியைந்து இருப்பது திருப்புகழ். இதன் சந்த நடை கேட்கும் அனைவரையும் ஆட்கொள்ள வல்லதாகும். அருணகிரிநாதர் கிளியாக மாறி, பின்பு அருளியதே கந்தரநுபூதி என்பர் அன்பர். யோக நெறியின் சாரமும், பக்திநெறியின் சாரமும் இயைந்து இருப்பது கந்தரநுபூதியாகும். இது ஒரு யோக நூல், பக்தி நூல், மந்திர நூல் எனினும் தகும். அப்படிப்பட்ட கந்தரநுபூதியில் நான் மிகவும் விரும்பிய பதிகங்களை இங்கு பதிவிடுகிறேன்.

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீ யலையோ
எல்லாமற என்னை இழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே! - கந்தர் அநுபூதி (அருணகிரிநாதர்)

"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்" என்பது இப்பாடலின் உயிர். எதிலும் மாற்றமில்லாத (நிலையில் திரியாதவன் இறைவன்), துன்பமில்லாத யோக வடிவினவன் இறைவன். யோகம் என்பது இறையுடன் நம்மை பொருத்தும் ஒரு உத்தி. இறை சார்ந்த சாதனைகள் எல்லாம் யோகமேயாம்! அப்படிப்பட்ட யோக மார்கத்தினை தன் சொல்லாலும் செயலாலும் அருளுபவன் இறைவன். முருகப்பெருமான் ஒரு யோக மூர்த்தி. சைவத்தின் சித்தாந்த நெறியில், சிறிது சாக்த நெறியின் தந்திர சாதனைகள் சேர்த்து தோன்றியதே கௌமாரம் எனும் முருக வழிபாட்டு நெறி (இது என் கருத்தேயாகும்- ஏனெனில் சைவ ஆகமங்களில் தந்திர சாதனைகள் மிகக்குறைவு, சாக்த வழிபாடுகளில் தந்திர சாதனைகள் மிகுந்து உள்ளது. அனால் கௌமார மார்க்கத்தில் யந்திர தந்திர முறைகள் உண்டு. சிவனுக்கு எந்தவித மூல மந்திரமும் இல்லை, நமசிவாய என்பது சிவ பஞ்சாட்சரம் எனினும் இது ஒன்றே சைவ மார்கத்தில் உள்ள மந்திரமாகும், சரபர் வழிபடு, பைரவர் வழிபடு எல்லாம் சைவத்தின் தந்திர முறைகளாய் இருக்கக்கூடும் என்பது என் கருத்து. அனால் முருகனுக்கு மூல மந்திரம் உண்டு. தேவியை உபாசிக்கும் அன்பர்கள் முதலில் உபதேசிக்கப்படுவது மஹாகணபதியும், பாலாவும் ஆகும் அவ்வாறிருக்க முருகனின் மூல மந்திரம் பாலாவின் பீஜாக்ஷரம் கொண்டும், மஹாகணபதியின் மற்றைய அக்ஷரங்கள் கொண்டும் விளங்குகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் கௌமாரம் பெரிதும் சைவ ஆகமத்துடனேயே தொடர்புள்ளதாக இருந்து வருகிறது) ஆதலின் முருகன் ஒரு யோகமூர்த்தியாக (குருவாக) இருக்கிறார் என்ன முதல் இரு அடிகளுக்கு பொருள் கொள்வதாகுக. தேவர்களுக்கும், இவ்வுலகிற்கும் தலைவனே, அப்படிப்பட்ட யோகநேறியினின்று என்னை, நானெனும் தன்மையினை இழக்க என் மனதிற்கு கட்டளை இடுவாயாக முருக என வேண்டுகிறார். நான் எனும் தன்மை உடையகால் மனம் உயிர்பெற்றுவிடுகிறது. மனம் உயிர் பெற்றால் அது நம்மை பரம்போருளினின்று பிரித்து விடுகிறது. தன்னை இழப்பதே நலம், நம்மை நாம் இழக்குங்கால், நம்மை நாம் இழப்பதை எவ்வாறு கண்டு கொள்வது? நம்மை இழந்தோம் என நாம் நினைக்குங்கால் மனம் உயிர்பெற்று பல விகாரமாகி மீண்டும் தன செயலினை செய்கிறது. இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அற்று தற்போது உள்ள பரமானந்த நிலையினில் நிற்பதே ஞானயோகமாகும். நம் மனம் மாய்ந்து போனது என எண்ணுங்கால், மனம் உயிர்பெற்று விடுகிறது. அவ்வாறிருக்க, தன்னை இழந்த நிலையினை சொல்ல வல்லவன் இறைவன் மட்டுமே என்பது காண்க. இறைவனே யோகா வடிவினன், அவனே யோகத்தினை வழங்கும் ஞான குருவும் ஆவான். ஆதலால் யோகா வடிவினான இறைவனை மனத்தினை மாய்க்க வேண்டுதலை உணர்தலே இப்பதிகத்தின் பொருள்.