Thursday, March 6, 2014

இமைபொருந்தாமல்...

"என்புருகி இனவேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பலநாளும் துன்ப கடல் புக்கு" - நாச்சியார் திருமொழி 

என் ஏக்கங்கள்
என்னுள்ளே தாக்கங்களாய்..
மோதி மோதி தெறித்த
அக்கினிக்குஞ்சுகள்
இன்று
நெருப்புப்பிழம்புகளாய்.....

என் எலும்புகளும்
உருக்கப்பட்டுவிட்டன- அவற்றினால்
இந்தக் காதல் நோய்
எனை
வடிவிழக்கச் செய்யினும்
பரவாயில்லை...
அவைகள் எனை
வலுவிழக்கவல்லவா செய்துவிட்டன!!!

நீயில்லாது...
நான்...
ஒரு இளம்துறவிபோல்
அணி துறந்ததுதான் நியாயமோ??!!

நீ
எங்குதான் இல்லை?...
எல்லாவற்றிலும் நினைவாக...
நீ
எங்குதான் இருகிறாய்??...
எல்லாவற்றிலும் கனவாக...
யாருக்கும் தெரியாமல்
உன்னை நானல்லவா வைத்திருக்கிறேன்!
என் கண்களின் நடுவே
பிம்பமாக!!!
நீயோ...
என் கண்களினுள்ளே
உருவாக மட்டுமல்லாமல்
உருத்தலுமாக!!!
நான்
கண் மூடித்தூங்கிவிட்டால்- நீ
காற்றுக்கு எங்கே போவாய்???
இத்துணை வருத்தத்திற்கு
எனை உள்ளாகிய
உனை நினைத்து
நான் அழுது- என்
கண்ணீரின் வெப்பத்தில் - நீ
கரைந்துவிட்டால்...
எனை உறங்கவும் விடாமல்...
உன் பிரிவால்
இறக்கவும் விடாமல்...
இப்படியோர் துன்பக்கடலுள்
நீச்சல் மறந்த மீனாய் - நான்
எனை ஆட்கொள்ள
நீ வருவாய் என்றே...
                             
                                 - சௌந்தர் 

No comments:

Post a Comment